பெண் காவலர் மீது ஆசிட் வீச்சு... மர்மநபர்கள் வெறிச்செயல்.. வேலூர் அருகே பரபரப்பு !
பெண் காவலர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர், திருப்பத்தூரில் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த பெண் காவலர் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார் மாவட்டம் திருப்பத்துார் என்ஜிஓ நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், லாரி டிரைவர். இவர் மனைவி லாவண்யா(28), திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணிக்கு பணி முடிந்ததும், அதே பகுதியில் போலீஸ் குடியிருப்பு வளாகத்துக்கு அருகே வசிக்கும் தனது அண்ணன் வீட்டுக்கு லாவண்யா நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென லாவண்யா மீது 'ஆசிட்' வீசி விட்டு தப்பிவிட்டனர். இந்த கொடூரச் செயலால் லாவண்யாவின் முகம் மற்றும் கைகள் வெந்துபோனது. இதனால் அவர் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக அவரை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து திருப்பத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண் போலீஸ் மீது மர்ம நபர்கள் 'ஆசிட்' வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.