திமுக நிர்வாகியை அடித்து உதைத்த இன்ஸ்பெக்டருக்கு டிரான்ஸ்பர்
சென்னை: விசாரணைக்காக மகனை அழைத்துச் செல்ல வந்து அவரது தந்தையான திமுக நிர்வாகியை அழைத்துச் சென்று அடித்த போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கொரட்டூரில் உள்ள வெங்கட்ராமன் நகரைச் சேர்ந்த முருகன்(30) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்(28) என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது குறித்து கடந்த 22ம் தேதி இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து முருகன் வினோத் மீது போலீசில் புகார் அளித்தார்.

பணியில் இருந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்(54) மற்றும் அவரது டிரைவர் பரமசிவம்(32) ஆகியோர் வினோத்தை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு வினோத் இல்லாததால் அவரது தந்தை விஜயகுமாரை(51) காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்துள்ளனர். போலீசாரால் விடுவிக்கப்பட்ட விஜயகுமார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அம்பத்தூர் பகுதி 83வது வட்ட திமுக செயலாளரான விஜயகுமாரை கட்சியினர் மருத்துவமனையில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்காதபோதிலும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி மணிவண்ணனும், பரமசிவமும் பணியில் குடிபோதையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
குடிபோதையில் திமுக நிர்வாகியை அழைத்துச் சென்று அடித்த மணிவண்ணன் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பரமசிவம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications