சசி குடும்ப நிதி ஒதுக்கீட்டுக்காக மட்டுமே கோப்புகளில் எடப்பாடி கையெழுத்து..நடிகர் ஆனந்தராஜ் விளாசல்
சசி குடும்பம் ஆதாயம் அடையும் வகையில் நிதி ஒதுக்கீட்டுக்காக மட்டுமே தமிழகத்தில் பல்வேறு கோப்புகளில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளாரே தவிர மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக அல்ல என்று நடிகர் ஆ
சென்னை: சசிகலா குடும்பம் ஆதாயம் அடையும் வகையில் நிதி ஒதுக்கீட்டுக்காக மட்டுமே தமிழகத்தில் பல்வேறு கோப்புகளில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளாரே தவிர மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக அல்ல என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு செயல்படாத அரசாக உள்ளது என்று மாற்று அணியினரும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஒன்றரை மாதங்களில் 1,570 கோப்புகளில் கையெழுத்திட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை ஆனந்தராஜ் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றிருப்பார்.
குறைந்தபட்சம், அரசு மாணவர்களுக்காவது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றிருப்பார். ஏதோ 1570 கோப்புகளில் கையெழுத்திட்டதாக எடப்பாடி கூறுகிறார். அதனால் மக்கள் நல பணிகள் ஏதேனும் நடந்ததா, கையெழுத்திட்ட திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினீர்கள், கோப்புகளை முழுமையாக படித்தீரா. இது குறித்து அவர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டுக்காகவே கோப்புகளில் கையெழுத்திடப்படுகிறது. இதனால் யார் பயனடைகிறார்களோ அவர்கள் அடைந்து கொண்டுதான் உள்ளார்கள்.
தண்ணீர் இல்லாததால் பெண்கள் இன்று தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த குடிநீர் பஞ்சத்தை போக்க ஏதேனும் திட்டங்களுக்கு அவர் கையெழுத்திட்டாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். ஜெயலலிதா இருந்த வரை அவர் மீது மகளிர் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர்.
அதிகாரம் இல்லாத ஒரு அணி, அதிகாரம் இருக்கும் மற்றொரு அணி ஆகிய இரண்டும் அதிமுக இணைப்பு குறித்து 4 வாரங்கள் இழுத்தடித்து பெரும் நாடகத்தை நடத்திவிட்டனர். எதை மறைப்பதற்காக இந்த நாடகம் என்று ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார்.