சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக்க நடிகர் ஆனந்தராஜ் கடும் எதிர்ப்பு!
அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை நியமிக்க ஆனந்தராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக்க சசிகலாவை நியமிக்க அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அதிமுக தொண்டர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ், சசிகலாவை பொதுச்செயலராக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆனந்தராஜ் கூறியதாவது:
அதிமுக தலைமை நியமனம் என்பது அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். எதையுமே காலம் அறிந்து செய்ய வேண்டும்.
எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் 200 பேர் மட்டுமே கட்சி அல்ல.. அடிமட்ட தொண்டர்களும் இருக்கிறார்கள்... அவர்களில் நானும் ஒருவன். பொதுச்செயலர் நியமனம் போன்றவற்றில் நிதானமாக செயல்பட வேண்டும் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆனந்தராஜ் கூறியுள்ளார்.