குடிபோதையில் காரை ஓட்டி விபத்து: சரணடைந்த நடிகர் அருண்விஜய் கைது- ஜாமீனில் விடுதலை!
சென்னை: குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய நடிகர் அருண்விஜய் இன்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் சொந்த ஜாமீனில் அருண்விஜய் விடுதலை செய்யப்பட்டார்.
நடிகை ராதிகா மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய நடிகர் அருண் விஜய் உச்சகட்ட போதையில் இருந்துள்ளார். அதே போதையுடன் காரை ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதினார் அருண்விஜய்.

இந்த விபத்தில் அருண்விஜய்க்கு காயம் ஏற்படவில்லை எனினும் குடித்துவிட்டு கார் ஓட்டியதால் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிடித்து வைத்திருந்தனர். ஆனால் அருண்விஜய்யோ, போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
கடந்த சில நாட்களாக அருண்விஜய் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனாலும் அருண்விஜய் போலீசில் ஆஜராகமல் இருந்து வந்தார்.
இதனிடையே அருண்விஜய் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸ் அதிகாரி ரயில்வே துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அருண்விஜய்யின் காரை திரும்ப ஒப்படைக்க வேண்டுமானால் அவர் போலீஸிடம் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் போலீசார் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று சென்னை தியாகராயர் நகர் பாண்டிபஜார் போக்குவரத்து காவல்நிலையத்தில் அருண்விஜய் சரணடைந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அருண்விஜய்யை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications