குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: ஜாமீனில் விடுதலையான ஜெய்யின் லைசென்ஸை ரத்து செய்ய பரிந்துரை
சென்னை அடையாறு பாலத்தில் கார் மோதிய விபத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி உயிர் தப்பினர்.
Recommended Video
சென்னை: அடையாறு பாலத்தின் தடுப்புச்சுவர் மீது நடிகர் ஜெய்யின் சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானதில் நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி நூலிழையில் உயிர் தப்பினர். குடிபோதையில் தனது சொகுசு காரை மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவரது லைசென்ஸை ரத்து செய்ய போக்குவரத்து புலனாய்வு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.
நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி சென்னை 28, கோவா, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். சினிமாத்துறையில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வருகின்றனர்.
இந்நிலையில் ஜெய் நடித்த பார்ட்டி என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து படக்குழு சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ஹோட்டலில் பார்ட்டி அளித்துள்ளது. இதில் நடிகர்கள் ஜெய்யும் பிரேம்ஜியும் கலந்து கொண்டனர்.
அதிகாலையில் நேரிட்ட விபத்து
இன்று அதிகாலை பார்ட்டி முடிந்து நடிகர் ஜெய் தனது ஆடிக்காரில் பிரேம்ஜியுடன் சென்றுள்ளார். அடையாறு பாலத்தின் மீது கார் சென்ற போது தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெய், பிரேம்ஜி
இதில் கார் பலத்த சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் காயமின்றி நூலிழையில் உயிர் தப்பினர்.
அளவுக்கு அதிகமாக மது
இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் மீட்டு
மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் நடிகர் ஜெய்யும், பிரேம்ஜியும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது தெரிய வந்துள்ளது.
கைதாகி ஜாமீனில் விடுதலை
இதையடுத்து அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதைத்தொடர்நது குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகர் ஜெய் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
தடுப்புச்சுவர் இல்லாமில் இருந்திருந்தால் கார் அடையாற்றில் பாய்ந்திருக்கும் என்றும் அதன் விளைவு மிக மோசமாக இருந்திருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் சிக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லைசென்ஸ் ரத்து
இதனிடையே குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய்யின் லைசென்ஸை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.