களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் தமிழகம் இருக்கிறது... நடிகர் கமல்
தமிழகம் களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை: தமிழகம் சீர்குலைந்துள்ளதால் அது களை எடுக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பதற்காக நான் போட்டி அரசியல் செய்ய வில்லை.
நாங்கள் இருவரும் வெவ்வேறு வழியில் பயணிக்கிறோம். அவர் நடித்த படத்தை போன்ற ஒரு படத்தையும் நான் நடித்ததில்லை. ரஜினியின் வெற்றியை பார்த்து என்னை பிரதிபலித்து கொள்ளும் பழக்கம் எனக்கு ஆரம்பத்திலிருந்து கிடையாது.

ரஜினியுடன் இணைய தயார்
மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவதில் அவமானமே கிடையாது. நாட்டு மக்களுக்கு நன்மை என்னும் போது கருத்து வேறுபாடுகளைக் கூட பார்க்க கூடாது. அரசியல் களத்தில் நான் ரஜினியை போட்டியாக நினைத்ததில்லை. சினிமாவில் கூட அவரை போட்டியாக நினைத்ததில்லை. அதனால்தான் எங்கள் இருவருக்குமிடையே உள்ள நட்பு தொடர்கிறதோ என்னவோ தெரியவில்லை.

இயக்கத்துக்கு தலைவர் நான்
ரஜினிக்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள் இருக்கலாம். ஆனால் ரஜினிக்கு இருப்பது ரசிகர் மன்றம். எனக்கிருப்பது இயக்கம். அந்த மன்றத்துக்கு ரஜினி தலைவர் அல்ல. ஆனால் எனது இயக்கத்துக்கு நான்தான் தலைவர். சமூக சேவைக்காக ஆரம்பித்த இயக்கம் 37 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது அரசியலுக்கான ஆரம்பத் தகுதியாகிவிட்டது.

ஜெயலலிதாவையே எதிர்த்தேன்
தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டதால் நான் அரசியலுக்கு வரவில்லை. இது சரியான சந்தர்ப்பம் அல்ல. சரியில்லாத மோசமான சந்தர்ப்பம். ஜெயலலிதா இருந்தபோதும் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தபோது அவரை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றுள்ளேன். மீண்டும் தடை விதித்தபோதும் அவரை எதிர்த்து நான் வழக்கு தொடுத்தேன். அவரை எதிர்க்க தைரியம் எனக்கில்லாவிட்டால் அவரிடம் மன்னிப்பு கேட்டு சமரசம் செய்து கொண்டிருப்பேன். ஆனால் தைரியம் இருந்ததால்தான் அவரை எதிர்த்தேன்.

ஆட்சியாளர்களுக்குத்தான் அவமானம்
தமிழகத்தை விட்டு நான் வெளியேறுகிறேன் என்று நான் கூறியதில் எனக்கா அவமானம், ஆட்சியாளர்களுக்குத்தான் அவமானம். நீதிபதியை கூப்பிட்டு மீண்டும் அந்த படத்துக்கு தடை செய்ததால் நான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். ஒரு அரசு நல்ல கலைஞனை மதிக்க வேண்டும். நான் நாட்டை விட்டு போகிறேனு சொன்ன போது அய்யோ அப்படியெல்லாம் சொல்லாதீங்கன்னு சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் அதை சொல்லவே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு அந்த மதிப்பு கிடையாது.

நாட்டுக்கு அவமானம்
நாட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தவர்கள்தான் நாட்டை நல்வழியில் நடத்தியிருக்கிறார்கள். காந்தி, அம்பேத்கர் ஆகியோர் நாட்டை விட்டு சென்றுவிட்டுதான் நல்லாட்சியை தந்தார்கள். அந்த ஆட்சியில் இருக்க பிடிக்காமல்தான் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்றுதான் கூறினேன். அதற்காக எனக்கு நாடு பிடிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. சமயோஜித அரசியல்வாதியின் சூழ்ச்சி இது. களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் தமிழகம் இருக்கிறது.

கல்விச் சுற்றுலா தொடரும்
பினராயி விஜயன், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரிடம் இருந்து நல்லறிவை பெற வேண்டும் என்பதுதான் எனது திட்டம். பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டு நல்லாட்சியை கொடுத்துள்ளனர். கல்விச் சுற்றுலா இன்னும் தொடரும். மம்தா பானர்ஜியை பார்க்கும் திட்டம் இல்லை. தென்னிந்திய அரசியல்வாதிகளுடன் மட்டுமே கலந்தாலோசித்து கொண்டிருக்கிறேன். இந்த ஆட்சி கலைந்தால்தான் தேர்தல் வரும் என்றில்லை. நாங்கள் தயாராக இருக்கும் போது தேர்தல் வரும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications