கமலின் நாளை நமதே திட்டத்தில் மாற்றம்... மதுரை, ராமநாதபுரத்தில் மட்டுமே முதற்கட்ட பயணம்!
நடிகர் கமல்ஹாசனின் நாளை நமதே சுற்றுப்பயண திட்டத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் நாளை நமதே சுற்றுப்பயணத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 22,23ல் நடிகர் கமல் மேற்கொள்ள இருந்த நாளை நமதே பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் புதிய அரசியல் கட்சி நாளை உதயமாகிறது. காலையில் ராமநாதபுரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் என்னும் புதிய பாதையில் பயணிக்கப் போகும் கமல்ஹாசன் மாலை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்துவைத்து கட்சியின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
இதனையடுத்து மக்கள் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக கமல் நாளை நமதே என்ற சுற்றுப் பயணத்தை மேற்கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல் பிப்ரவரி 22,23 ஆகிய தினங்களில் ராமநாதபுரம், மதுரை,திண்டுக்கல், சிவகங்கையில் முதற்கட்டமாக நாளை நமதே பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய கட்சி தொடங்குவதற்காக கமல் மதுரை சென்றடைந்துள்ள நிலையில் அவரது பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் நடக்க விருந்த நாளை நமதே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கமல் மதுரை, ராமநாதபுரத்தில் மட்டுமே மக்களை சந்திக்க உள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.