நிஜவாழ்க்கையில் ஹீரோயிசம் வேண்டாம்... ரயில்பயணிகளிடம் பேசிய கார்த்தி
சென்னை: ஹீரோயிசம் சினிமாவுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
நிஜ வாழ்க்கையில் குறிப்பாக ரெயில் பயணத்தில் ஹீரோயிசம் காட்டவேண்டாம் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். செல்போனில் பேசியபடி, விளையாடியபடி கவனக்குறைவு ரயில்பாதையை கடக்கவேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடத்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது, படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்பன உள்பட பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடிகர் கார்த்தி
ரயில்வே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினார்.
கார்த்தி கையெழுத்து
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அனுபம் ஷர்மா மாதிரி ரயில் பெட்டியை கார்த்திக்கு வழங்கினார். பின்னர் பாதுகாப்பான பயணம் செய்வேன் என்ற உறுதிமொழி அடங்கிய பதாகையில் கார்த்தி தனது கையெழுத்தினை போட்டார்.
இதனைத்தொடர்ந்து ரயில் பயணிகளும் பதாகையில் கையெழுத்திட்டனர்.
ரயில் பயணம்
பயணிகள் முன் பேசிய கார்த்தி, ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏ.சி. காரில் செல்வதை விடவும் ரயிலில் செல்வதைதான் நான் அதிகம் விரும்புவேன் என்று கூறினார்.
மறக்கமுடியாத பயணம்
ரயில் பயணிகளாகிய உங்களை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. நான் கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற சமயங்களில் ரயில் சேவைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த தருணத்தை எளிதில் மறந்துவிடமுடியாது.
பாதையில் கவனம்
சிலர் செல்போனில் பேசியபடி, விளையாடியபடி கவனக்குறைவு காரணமாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் ரயில் மோதி மரணம் அடைகின்றனர். இறப்பவர்களை விடவும் அவர்களின் குடும்பத்தினருக்குத்தான் அதிக சுமை ஏற்படுகிறது.
ஹீரோயிசம் வேண்டாம்
‘ஹீரோயிசம்' சினிமாவுக்கு பொருத்தமானதாக இருக்கும். நிஜ வாழ்க்கையில் குறிப்பாக ரயில் பயணத்தில் ‘ஹீரோயிசம்' காட்டவேண்டாம். பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாதவாறு சுற்றுச்சுவர் அமைத்தல் உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டுவருகிறது. ரயில்வேக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை தொடருங்கள் என்றும் கார்த்தி கூறினார்.
குறும்படத்தில் கார்த்தி
நடிகர் கார்த்தி நேரடியாக வந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்றது மட்டுமல்லாது ரயில் பயணிகள் பாதுகாப்பு பற்றிய குறும்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் படிக்கட்டில் பயணம் செய்வது கூடாது என்றும் செல்போனில் பேசியபடி இருப்புப்பாதையை கடக்கக் கூடாது என்றும் பல்வேறு அறிவுரைகளை கார்த்தி கூறியுள்ளார். இந்த குறும்படம் இனிவரும் நாட்களில் தியேட்டரில் ஒளிபரப்பாகும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.