நாங்கள் திமுக கூட்டணியில் சேரக்கூடாது என சதி நடக்கிறதோ..?: கார்த்திக் சந்தேகம்
சென்னை: நாடாளும் மக்கள் கட்சியை திமுக கூட்டணியில் சேரவிடாமல் சதி நடப்பதாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளன. அந்தவகையில், கடந்த வியாழனன்று நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான கார்த்திக், அறிவாலயம் சென்று திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்திப்பதாக தகவல் வெளியானது. இதன்மூலம் திமுக கூட்டணியில் நாடாளும் மக்கள் கட்சி இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்கென தனது காரில் அறிவாலயம் புறப்பட்ட கார்த்திக் பாதி வழியில் தனது முடிவைத் திடீரென மாற்றிக் கொண்டார். ஸ்டாலினை சந்திக்காமலேயே அவர் திரும்பி விட்டார்.

கடத்தல்?
இதற்கிடையே, கார்த்திக் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஏன் ஸ்டாலினை சந்திக்கவில்லை என்பது குறித்து கார்த்திக் விளக்கமும் அளிக்கவில்லை. இது திமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுப்பு...
இந்நிலையில், தி இந்து நாளிதழுக்கு நடிகர் கார்த்தி அளித்துள்ள பேட்டியில், அவர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "இது அப்பட்டமான வதந்தி. என்னை யாரும் கடத்த வில்லை; கடத்தவும் முடியாது.

சதி...
கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தைகள் சுமூகமாக போய்க் கொண்டிருந்த நிலையில், யாரோ திட்டமிட்டு, முரண்பட்ட தகவலை தந்து குழப்பத்தை ஏற்படுத்திவிட் டார்கள். நாங்கள் திமுக கூட்டணியில் சேரக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறதோ என்று நான் சந்தேகிக்கிறேன்'' என்றார்.

தேமுதிக...
ஏற்கனவே, திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், தனித்துப் போட்டி என அறிவித்தார் விஜயகாந்த்.

எதிர்பார்ப்பு...
இதனால், திமுகவுடன் நாடாளும் மக்கள் கட்சி கூட்டணியில் சேர்ந்தால் கேட்டது கிடைக்கும், இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வது என்ற முடிவில் தான் கார்த்திக் இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications