ரஜினியின் அரசியல் அறிவிப்பு இருக்கிறது என்று சூசகமாக சொன்ன மகேந்திரன்... விண்ணதிர வரவேற்ற ரசிகர்கள்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என்று இயக்குநர் மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் சந்திப்பு இன்று காலை எட்டு மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் துவங்கியது.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தொடங்கி நான்கு நாட்கள் ரசிகர்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். திட்டமிட்டபடி, அந்த சந்திப்பு இன்று காலை 8 மணியளவில் கோடம்பக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் சந்திப்பு தொடங்கியது.
இன்று காலை தொடங்கிய நிகழ்வில், மேடையில் மூன்று இருக்கைகள் மட்டுமே போடப்பட்டு இருந்தன. ரஜினிகாந்த், இயக்குநர்கள் கலைஞானம், மகேந்திரன் ஆகியோருக்கு அவை ஒதுக்கப்பட்டு இருந்தன. முதலில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் நிகழ்வு தொடங்கியது.
முதலில் ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானம் பேசினார். அப்போது, ரஜினியின் வீட்டில் சுக்கிரன் குடி இருக்கிறார். அதனால் தான் ரஜினி இந்த இடத்தில் இருக்கிறார். அவருக்கு அரசியலில் மிக முக்கிய இடம் இருக்கிறது என்றார்.
அதற்கு பின் பேசிய இயக்குநர் மகேந்திரன், ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய தேவை இருக்கிறது. அரசியலுக்கு ரஜினியின் தேவை இருக்கிறது. முதலில் அரசியல் பேச வேண்டாம் என்று ரஜினி என்னிடம் சொன்னார். ஆனால், மேடைக்கு வந்தததும் என்ன நினைக்கிறீர்களோ அதை பேசுங்கள் என்று சொன்னார். அப்படி என்றால் எதோ ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டு தான் இந்த சந்திப்பை நடத்தி உள்ளார் என்று சூசகமாக தெரிவித்தார்.
மகேந்திரனின் இந்த பேச்சில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்ட ரசிகர்கள், விண்ணதிர கைதட்டி வரவேற்றனர். இந்த கைதட்டல் அடங்க ஒரு நிமிடத்திற்கு மேலானது.