கர்நாடகாவில் என் படம் ரிலீஸ் ஆகாது என சொல்லவில்லை... நடிகர் சிம்பு விளக்கம்
சென்னை: காவிரி பிரச்சனையை முன்வைத்து கர்நாடகாவில் தம்முடைய படத்தை வெளியிடமாட்டேன் என தாம் கூறவில்லை. அரசியல் ரீதியான அறிக்கை மூலம் விளம்பரம் தேடும் ஆள் நானல்ல என்று நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி பிரச்சனையில் கன்னட நடிகர்கள் வீதியில் இறங்கி போராடினர். இதற்கு பதிலடியாக நடிகர் சிம்பு, தம்முடைய படங்களை கர்நாடகாவில் வெளியிட மாட்டேன் என கூறியதாக செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக இன்று தாய்லாந்தில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது நான் தாய்லாந்து நாட்டில், 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவிரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர்.
இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவிரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.
சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே. அதேபோல, நாம் அண்டை மாநில மக்களாக சுமூகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன்.
Admin : Statement on #CauveryIssue from #STR pic.twitter.com/n9bUzVPfL8
— STR (@iam_str) September 12, 2016
இந்த பிரச்சினையை கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்'' என்று சிம்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications