திமுகவின் “கடைசி தேர்தல்” இதுதான் – நடிகர் சிங்கமுத்து பேச்சு
சேலம்: வரும் நாடாளுமன்ற தேர்தல்தான் திமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நடிகர் சிங்கமுத்து பிரச்சாரத்தில் விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி, அதிமுக வேட்பாளர் டாக்டர் காமராஜை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ராணிப்பேட்டையில் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் , "விஜயகாந்துக்கு திசை எதுவும் தெரியாது. அவரை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினால் அவர் நிற்பது எந்த திசை என்று கூட அவருக்கு சொல்லத் தெரியாது. இவர் எங்கே நாட்டை காப்பாற்றப் போகிறார்.
தமிழ்நாட்டை காப்பாற்றும் ஒரே முதல்அமைச்சர் ஜெயலலிதா தான். இன்று தமிழ்நாட்டை காப்பாற்றும் அவர், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பாரதத்தை காப்பாற்றுவார். அடித்தட்டு மக்களுக்காகவும், மாணவ, மாணவிகளுக்காகவும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
அவருக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு உள்ளது. நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு அதிகரித்தும் வருகிறது. இதை ஜீரணிக்க முடியாத கருணாநிதி ஏதேதோ பேசுகிறார்.இலங்கை தமிழர் பிரச்சினையில் கருணாநிதி இரட்டை வேடம் போட்டார். திமுகவுக்கு இது தான் இறுதி தேர்தல் ஆகும்" என்று அவர் பேசியுள்ளார்.