நில மோசடிப் புகார்: திண்டுக்கல் கோர்ட்டில் மனைவியுடன் நடிகர் சந்திரசேகர் சரண்
திண்டுக்கல்: நில மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் வாகை சந்திரசேகர், தனது மனைவியுடன், திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்து, பின்னர் ஜாமீன் பெற்றார்.
ஈரோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியையாகப் பணிபுரியும் கௌசல்யா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது தந்தை குமரவேலுக்குச் சொந்தமான 3.15 ஏக்கர் நிலம், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த மாலையக்கவுண்டன்பட்டியில் இருந்தது. இதில், 2.97 ஏக்கர் நிலத்தை எனக்கும், சகோதரிகள் வித்யா, ரம்யா ஆகியோர் பெயர்களிலும் மாற்றிக் கொடுத்தார்.

இந்த நிலையில், திமுக செயற்குழு உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி, கோவையைச் சேர்ந்த சுப்பம்மாள், மாலையக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் உள்ளிட்ட 11 பேர் கூட்டாகச் சேர்ந்து அந்த நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, பாகீரதன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
எனவே, போலி ஆவணம் மூலம் மோசடியாக நிலத்தை விற்பனை செய்த 11 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் நில அபகரிப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் 11 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
இதில், சுப்பம்மாள், பாப்பம்மாள், பத்திர எழுத்தர் முருகபாண்டி ஆகிய 3 பேரையும், கடந்த ஜூன் 21-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யாமல் இருக்கும் வகையில், வாகை சந்திரசேகரும், அவரது மனைவி ஜெகதீஸ்வரியும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்மீது விசாரணை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்தது.
அங்கு, மனைவி ஜெகதீஸ்வரியுடன், வாகை சந்திரசேகர் திண்டுக்கல் 2-ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். மாவட்ட நில அபகரிப்புப் பிரிவில், நாள்தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.












Click it and Unblock the Notifications