விதிகளின்படி நடிகர் சங்கத்தேர்தல் நடத்தப்படும்- நீதிபதி பத்மநாபன்
சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18 ம் தேதி நடைபெறும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி பத்மனாபன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.
என்று ஏற்கனவே நீதிபதி பத்மநாபன் அறிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் சங்கத் தேர்தலானது கீழ்க்கண்ட விதிமுறைகளின்படி நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-2018-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
8.10.2015 அன்று பிற்பகல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதனால் சென்னை நகர எல்லைக்கு அப்பால் வசிக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்களுடைய முகவரிக்கு வாக்கு சீட்டு தபாலில் 9.10.2015 அன்று அனுப்பப்படும்.
தபாலில் அனுப்பப்படும் வாக்குசீட்டுகள் 17.10.2015 மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து சேரவேண்டும்.
சென்னை நகர எல்லைக்கு அப்பால் வசிக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்கள் நேரில் வந்து வாக்களிக்கக்கோரும் விண்ணப்பம் 30.9.2015-க்குள் தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்துசேரவேண்டும். அதற்குப்பிறகு வேண்டுகோள் வந்தால் நிராகரிக்கப்படும். அனுமதி கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவரவேண்டும்.
உறுப்பினர்கள் தங்களுடைய முகவரி மாற்றம் பற்றி தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் 30.9.2015 மாலை 5 மணிவரை தெரிவிக்கலாம். அதற்குப்பிறகு முகவரி மாற்றம் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
சங்க விதிகளின்படி தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நீதிபதி பத்மநாபன் தேர்தல் விதிமுறைகளை தெரிவித்திருக்கிறார்.