அப்துல் கலாமும், அரவிந்த் கெஜ்ரிவாலும் தனக்கு உத்வேகம் அளித்தவர்கள் : விஷால் உருக்கம்
சென்னை: அப்துல் கலாமும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் தான் தனக்கு தேர்தலில் போட்டியிட உத்வேகம் அளித்தவர்கள் என்று நடிகர் விஷால் தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகர் தொகுதியில் வருகிற 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் தமிழக அரசியல் அரங்கையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதற்குக் காரணம் தற்போது களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தான். விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்ற தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், ஒன்றிணைந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், தனித்து களம் இறங்கும் டி.டி.வி.தினகரன் என பலம் வாய்ந்த போட்டியாளர்கள் இருக்கும் இடத்தில் நடிகர் விஷாலும் சுயேட்சையாக களம் இறங்குகிறார்.
கடைசி நாளான இன்று விஷால் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக இன்று காலை காமராஜர் இல்லம், ராமபுரம் எம்.ஜி.ஆர் இல்லம், மெரினாவில் ஜெயலலிதா சமாதி ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தினார் விஷால்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனக்கு ஆர்.கே நகர் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு உதவவே தேர்தல் களத்தில் இறங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தான் அரசியலில் ஜெயித்து அரசியல்வாதியாக வேண்டும் என்கிற எண்ணத்தில் வரவில்லை என்றும், என்ன நடந்தாலும் களத்தில் மக்களோடு மக்களாக சாதராண மனிதனாகவே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் அப்துல் கலாமும், அரவிந்த் கெஜ்ரிவாலும் என்று குறிப்பிட்டு உள்ளார். அவர்கள் இருவரும் தான் தனக்கு உத்வேகத்தை அளித்து இருப்பதாகவும் விஷால் தெரிவித்தார்.
மேலும், தனது இந்த முடிவை திரைத்துறையில் இருக்கும் குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஆர்யா உள்ளிட்ட பலர் வரவேற்று இருப்பதாகவும், இன்னும் கமல்ஹாசனை சந்திக்கவில்லை என்றும் மனுத்தாக்கல் செய்த பின்பே அவருடன் பேச இருப்பதாகவும் விஷால் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications