ரூ. 10 லட்சம் கேட்டு சென்னையில் கடத்தப்பட்ட நடிகை மீட்பு... கணவரே கடத்தியது விசாரணையில் அம்பலம்
சென்னை: சென்னையில் ரூ. 10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நடிகையை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் கடத்தப்பட்ட நடிகையின் கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போரூர் மதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா (22). தென் இந்திய அழகி போட்டியில் வெற்றி வாகை சூடிய இவர், 3 குறும்படங்களில் நடித்துள்ளார். தாயார் ஜானகியுடன் வசித்து வரும் இவர், தற்போது 3 படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் தனது தாயாருடன் சென்னை தி.நகருக்கு வந்த நிஷாவை, அடையாளம் தெரியாத சிலர் காரில் கடத்திச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜானகி, தனது மகள் கடத்தப்பட்டது குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நிஷாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் தியாகராயநகர் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் நிஷாவைத் தேடி வந்தனர்.
நிஷாவின் செல்போன் நம்பர் மூலம், அவர் கடத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்தனர். அப்போது கடத்தல்காரர்கள் நிஷாவை கோவா உள்பட பல வெளிமாநிலங்களுக்கு கடத்தி அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதற்கிடையே, நிஷாவின் தாயாரைத் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நிஷாவை சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் சிறை வைத்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் நிஷா அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிஷா பத்திரமாக மீட்கப்பட்டார். அவரைக் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் முக்கியமானவர் பஷீர் (27). இவரும் சென்னை போரூரைச் சேர்ந்தவர். கைதான மற்ற இருவர் பெயர் ராம்குமார் (24), மணி (23) என்பதாகும். இவர்கள் இருவரும், பஷீரின் கூட்டாளிகள் ஆவார்கள்.
கைது செய்யப்பட்ட பஷீர், போரூர் பகுதியில் கேபிள் டி.வி. தொழில் செய்கிறார். இவர் நிஷாவின் முன்னாள் கணவர் ஆவார். பஷீர் - நிஷா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தொழில் ரீதியாக கேபிள் கனெக்ஷன் கொடுக்கச் செல்லும் இடங்களில் வசிக்கும் அழகான பெண்களுக்கு காதல் வலை வீசி, திருமணமும் செய்து கொள்வது பஷீரின் பழக்கமாம். நிஷாவிற்கு முன்னதாக அவர் மேலும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்துள்ளார். இது தெரிய வந்ததைத் தொடர்ந்து கணவரைப் பிரிந்து வந்துவிட்டார் நிஷா.
இதனால் ஆத்திரத்தில் இருந்த பஷீர், நிஷாவைக் கடத்திச்சென்று பணம் பறிக்க திட்டமிட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான பஷீர் உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்ற காவலில் நேற்று புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் நிஷா தனது மனைவி என்றும், அவரை கடத்திச்செல்லவில்லை என்றும், பணம் கேட்டு மிரட்டவில்லை என்றும் பஷீர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.