தாம்பரத்தை தாண்டினா, தாமரையை யாருக்கும் தெரியாது.. குளத்து தாமரையான்னு கேட்பாங்க-குஷ்பு நக்கல்!
தமிழகத்தில் பாஜகவின் சின்னமான தாமரை அவ்வளவாக தெரியாது. ஆனால் காங்கிரஸின் கை சின்னமானது மூலை முடுக்கெல்லாம் தெரியும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தை பொருத்தவரை குளத்தில் உள்ள தாமரை மலரைத்தான் மக்களுக்கு தெரியுமே ஒழிய பாஜகவின் சின்னமான தாமரை சென்னை தாம்பரத்தைத் தாண்டினால் யாருக்கும் தெரியாது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கிண்டல் செய்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு அறிவித்துள்ள நீட் தேர்வால் தமிழகத்தின் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பகல் கனவாகிவிடும். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மத்திய அரசு நள்ளிரவில் பல்வேறு முடிவுகளை எடுக்கிறது.
இது கண்டனத்துக்குரியது. எந்த ஒரு முடிவை எடுக்கும்போதும் அதன் சாதக, பாதகத்தை பாஜக சீர்பிரித்து பார்ப்பதில்லை. மீனவர் பிரச்சினையில் எந்த முடிவும் எடுக்க வில்லை.
உத்தரப்பிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் வெற்றி பெற்றுவிட்டதாக பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் கோவாவிலும், மணிப்பூரிலும் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் விதமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவா, மணிப்பூரை போல தமிழகத்திலும் பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்கள், நகரங்கள் மட்டுமல்ல சென்னையில் தாம்பரத்தை தாண்டினால் தாமரையை தெரியாது.
கிராமப்புறங்களில் போய் தாமரையை தெரியுமா என்று கேட்டால், குளத்தில் உள்ள தாமரைதானே நன்றாக தெரியும் என்கின்றனர். ஆனால் மூலை முடுக்கெல்லாம் காங்கிரஸின் கை சின்னத்தை எல்லாருக்கும் தெரியும். வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் என்றார் அவர்.