சென்னைவாசிகளே... தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்கள்!
சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வெள்ளத்தை ஏற்படுத்தியது. நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன.
இந்த ஆண்டு சராசரி அளவை விட மழை குறைவாக பெய்துள்ளது. கடந்த 140 ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டில் தான் குறைந்தளவு மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் கடந்தாண்டு ஆண்டு 62% மழையளவு குறைந்துள்ளது. இதில் 23% சதவிகிதம் சென்னையில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் 80% அளவிற்கு பருவமழை குறைந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை
சென்னையில் வெயில் காலம் வரும் முன்பே சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரின் ஓர் ஆண்டுக்கான சராசரி மழையின் அளவு 1,200 மில்லி மீட்டர் ஆகும்.

நிலத்தடி நீர்மட்டம்
இந்நிலையில், 2015 முதல் 2016 டிசம்பர் மாதங்களில் உள்ள நீரின் அளவை ஒப்பிடும்போது சென்னையிலுள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு 0.97 மீட்டர் முதல் 2.92 மீட்டர் வரை குறைந்துள்ளது.

ஏரிகளில் நீர்மட்டம்
இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளில் 4-ல் 1 பங்கு தண்ணீர் கூட இல்லை என கூறப்படுகிறது. மொத்த கொள்ளளவான 11057 மில்லியன் கனஅடிக்கு 1500 மில்லியன்கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. எனவே, கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என கூறப்படுகிறது.

குடிநீர் சிக்கனம்
சென்னைவாசிகள் நீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடிநீர் வாரியத்தால் சுத்திகரித்து வழங்கப்படும் நீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற தேவைகளுக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குழாயை மூடி வையுங்கள்
தண்ணீர் வழங்கப்படும் குழாய் அமைப்பில் ஏற்படும் நீர்க்கசிவை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். பயன்பாட்டில் இல்லாதபோது குழாயை மூடிவைக்க வேண்டும்.
சமையலறை, குளியலறையில் இருந்து வெளியேறும் நீரை செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இதுதவிர கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாய கிணறுகள் மூலம் சப்ளை
ஆரணி, கொசஸ்தலையாற்று படுகைகளில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காரணை, சிறுவானூர், புல்லரம்பாக்கம், மூவுர், கீழானூர், மேலானூர், வெள்ளியூர், இராமராஜன் கண்டிகை மற்றும் மாகரல் ஆகிய கிராமங்களில் உள்ள 273 தனியார் விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து சுழற்சி முறையில் சென்னை நகர மக்களின் பயன்பாட்டுக்கு தேவைக்கு ஏற்றவாறு குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதிநீர்
இதுதவிர சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வலியுறுத்தி, ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதன்படி ஆந்திரா அரசு தற்போது விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விட்டது. அந்த நீர் சென்னையை வந்தடைய இன்னும் சில நாட்கள் ஆகும். எனவே எனவே பிப்ரவரி மாதம் முதல் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது சென்னை குடிநீர் வாரியம்.












Click it and Unblock the Notifications