மீண்டும் ஆதிராஜாராம்.. அதிமுக அமைப்புச் செயலராக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவராக நியமனம்!
சென்னை: அதிமுகவில் ஒருகாலத்தில் கோலோச்சி பின்னர் காணாமல் போன ஆதி ராஜாராம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதிமுகவின் அமைப்பு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக டி.ஜி.வெங்கடேஷ் பாபு இருந்தார். அவர் வட சென்னை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் பொறுப்பு தற்போது ஆதி ராஜாராமிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் ஓராண்டு காலத்துக்கு இந்த அமைப்பின் தலைவராகச் செயல்படுவார்.
அதேபோல் அதிமுகவிலும் ஆதி ராஜாராமுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அக்கட்சியின் அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அமைப்புச் செயலாளர்களாக விசாலாட்சி நெடுஞ்செழியன், பொன்னையன், பி.எச்.பாண்டியன், சுலோச்சனா சம்பத், செம்மலை, கோகுல இந்திரா, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
2000ஆம் ஆண்டுகளில் சென்னை அதிமுகவில் கோலோச்சியவர் ஆதி ராஜாராம். வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். தென் சென்னை மாவட்ட அதிமுக செயலராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications