அழகிரியின் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி - ஹைகோர்ட்
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடக் கோரி கல்லூரி சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. நடப்பு ஆண்டுக்கான பொறியில் கலந்தாய்வு பட்டியலில் தயா பொறியியல் கல்லூரியின் பெயரை சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் முறையாக அனுமதி பெறப்பட்ட கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடத்த இதுவரை அனுமதி வழங்காததை நீதிமன்றம் கண்டித்தது.
இந்த கல்லூரியை கட்டும்போது அழகிரி அருகில் உள்ள கோவில் நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.