சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் ஜெயலலிதா நேர்காணல் !
சென்னை: தமிழக சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஜனவரி 30-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 23-ந் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

234 தொகுதிகளுக்கும் 26 ஆயிரத்து 174 பேர் விருப்பமனு அளித்தனர். இதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 7,936 பேர் மனு செய்திருந்தனர். 19,498 பேர் தாங்கள் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்பமனு கொடுத்திருந்தனர்.
இந்த விருப்ப மனு தாக்கல் மூலம் அ.தி.மு.க.வுக்கு ரூ.28 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பின்னர் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தகுதியுள்ள 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சமீபத்தில் வெற்றிவேல், நூர்ஜகான், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட 5 பேரை ஜெயலலிதா அழைத்து நேர்காணல் நடத்தினார். அதன் பிறகு அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளுடன் சந்திப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா இன்று மீண்டும் நேர்காணலை தொடங்கினார்.
அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களில் சுமார் 60 பேர் வரவழைக்கப்பட்டனர். நேர்காணலின் போது கட்சியின் வெற்றி வாய்ப்புகள், வேட்பாளர்களின் தொகுதியில் அதிமுகவின் பலம் எவ்வாறு உள்ளது. 1989ல் வேட்பாளர்கள் அதிமுகவின் எந்த அணியில் இருந்தனர் என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க் கிழமை) சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா நேர்காணலை தொடங்கி இருப்பதால் அ.தி.மு.க.வினரிடையே உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications