சமஸ்கிருத மொழி திணிப்பு விவகாரம்: கருணாநிதிக்கு தமிழிசை கண்டனம்
சென்னை: தமிழகத்தில் மொழிகளை தேர்வு செய்து படிப்பது அவரவர் விருப்பம், இதை முடிவு செய்யும் உரிமை கருணாநிதிக்கோ அல்லது மற்ற தலைவர்களுக்கோ இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு மீண்டும் முயலுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்திளாளர்களிடம் கூறுகையில்,

மாணவர்களிடம் ஒரு மொழியை திணிக்க கூடாது என கருணாநிதி கூறியுள்ளார். மத்திய பாடத்திட்டத்தில் எந்த ஒரு மொழியையும் மாணவர்கள் விரும்பினால் எடுத்து கொள்ளலாம். மாணவர்கள் மத்தியில் மொழிகள் திணிக்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவை தாண்டினால் ஆங்கிலம் தேவைப்படும் என்தால் அந்த மொழியை கற்கிறோம். ஒரு மாநிலத்தை தாண்டி சென்றால் இந்தி தேவைப்படுகிறது. அதை கற்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கருணாநிதியோ மற்ற தலைவர்களோ யார் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை கிடையாது.
தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக, 10 லட்சம் ஜி.பி.எஸ். கருவிகளை வழங்க உள்ளது. கடலில் செல்போன் கோபுரங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இல்லை
தமிழக முதல்வர் ஜெயலலிதா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது கட்சி ரீதியான சந்திப்பு கிடையாது. இது ஒரு ஆரோக்கியமான சந்திப்பு. மக்களுக்கு நலன் தரக்கூடிய வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை பெற வேண்டும் என்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி என கூறுவது சரியானதல்ல. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், பா.ஜ.க. தலைவரை சந்திக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிராக மாநில அரசு செயல்பட்டால் அதை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications