ஸ்ரீரங்கத்தில் திமுகவின் ஆனந்த் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் ஓட்டு கிடையாது!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்களில் திமுகவின் ஆனந்தை தவிர வேறு யாருக்கும் அங்கு ஓட்டு கிடையாது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் திமுகவின் ஆனந்த், அதிமுகவின் வளர்மதி, பாஜகவின் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
வேட்பாளர்களில் ஆனந்துக்கு மட்டுமே ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டு உள்ளது. மற்ற வேட்பாளர்களுக்கு ஸ்ரீரங்கத்தில் ஓட்டு கிடையாது. ஆனந்த் இன்று காலையிலேயே வாக்களித்துவிட்டார்.
அதிமுக வேட்பாளர் வளர்மதியும், பாஜக வேட்பாளர் சுப்பிரமணியமும் திருச்சி மேற்கு தொகுதியைச் சேர்ந்தவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியைச் சேர்ந்தவர். டிராபிக் ராமசாமி சென்னையைச் சேர்ந்தவர்.