சசிகலா புஷ்பாவுக்கு அதிமுக காட்ட போகும் ரியாக்ஷன் என்னவோ?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீது நாடே அதிரும் வகையில் என்னை அறைந்தார் என அதிர்ச்சியான குற்றச்சாட்டை தைரியமாக ராஜ்யசபாவில் முன்வைத்திருக்கிறார் அக்கட்சி எம்.பி. சசிகலா புஷ்பா. தங்களது கட்சித் தலைவிக்காக "உயிரை கொடுத்த" அதிமுக தொண்டர்கள் சசிகலா புஷ்பாவுக்கு என்ன பதிலடி தருவார்கள் என்பதுதான் தமிழக அரசியல் களத்தில் திகிலாக இருக்கிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுச்செயலர் ஜெயலலிதாதான் தெய்வம்...அவரது உத்தரவுதான் வேதவாக்கு... அவரை மீற முடிவு செய்தால் கட்சியில் மட்டும் இருக்க முடியாது என்பதல்ல... பொதுவெளியில் தலையும் காட்ட முடியாது என்பது தமிழகம் சந்தித்த வரலாறு...
ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு, வழக்கறிஞர் விஜயன் தாக்குதல், சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு அதிமுக மகளிரணி கொடுத்த 'வரவேற்பு' என எத்தனையோ உதாரணங்கள் உண்டு... ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் வீட்டுக்கு 'ஆட்டோக்களில்' அடியாட்களை அனுப்பி மிரட்டி அரசியலில் ஏறுமுகம் கண்டவர்களும் உண்டு...
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரன் மீதே ஹெராயின் வழக்கையும் போட்டது அதிமுக அரசு... ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவருக்கு நெருக்கமானவர் என்பதாலேயே இளம் பெண் செரீனா மீது கஞ்சா வழக்கும் பாய்ந்தது... இதுவும் தமிழகத்தில் நடந்தேறிய 'வரலாற்று' சம்பவங்கள்தான்..
இப்பொழுது ஜெயலலிதாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் ராஜ்யசபாவிலேயே என்னை ஜெயலலிதா அடித்தார்; சித்ரவதை செய்தார்; ராஜினாமா செய்ய மிரட்டினார் என்றெல்லாம் சசிகலா புஷ்பா பகிரங்கமாக ஆவேசமாக பேசினார்.. அத்துடன் எனக்கு பாதுகாப்பு கொடுங்கள் எனவும் கதறினார்... இத்தனை கதறலுக்குப் பின்னர் திமுக தலைவர்களிடம் பகிரங்க மன்னிப்பும் கேட்டார் சசிகலா புஷ்பா.
இது அதிமுக தொண்டர்களை ரொம்பவே கொந்தளிக்க வைத்துள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு போனார் ஜெயலலிதா என்பதற்காக தற்கொலை செய்தவர்களை 'கொண்டாடுகிற' கட்சி அதிமுக.
இப்போது திமுக துணையுடன்தான் ஜெயலலிதாவை எதிர்க்கிறாரோ; எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என சவால்விடுகிறாரோ சசிகலா புஷ்பா என்கிற அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறார்... இதனால் என்ன மாதிரியான எதிர்விளைவுகள் அதிமுகவினரிடம் இருந்து வர இருக்கிறதோ என்ற அடுத்த திகில் எப்போது நடக்குமோ?