லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்.. தடுப்புகளை தகர்த்து ராஜாஜி ஹாலுக்குள் பாய்ந்ததால் பரபரப்பு!
ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தொண்டர்களை அனுமதிக்காததால் தடுப்பை உடைத்து தொண்டர்கள் ராஜாஜி ஹாலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள், தொண்டர்களை அனுமதிக்காததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் தடுப்பை உடைத்து ராஜாஜி ஹாலுக்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
75 நாட்களாக, காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, நுரையீரல் தொற்று நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார். அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை பார்க்க அப்போலோ வாசலில் கால் கடுக்க நின்றனர். ஆனால் பெரிய தலைவர்களாலேயே ஜெயலலிதாவை நேரில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் மறைந்த பிறகு பொது மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வரின் உடலுக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள், பெரும்புள்ளிகள் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்களும், தொண்டர்களும், ராஜாஜி ஹாலில் போடப்பட்டுள்ள தடுப்புக் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தொண்டர்கள் கூறும் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மாலைக்குள் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடலை பார்க்க முடியாது. எனவே, அஞ்சலிக்கான நேரத்தை நீடிக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications