ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு... வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க மக்களுக்கு அனுமதி!
அதிமுக தொண்டர்கள் தங்களின் அன்புத் தலைவி ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்டத்து வீட்டை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாவின் நினைவுகள் அதிமுக தொண்டர்கள் மனதில் இருந்து அத்தனை எளிதாக நீங்கிவிடாது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் லட்சோப லட்சம் தொண்டர்களால் மேலும் பரவும். சென்னைக்கு வரும் அதிமுக தொண்டர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தையும், தி. நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தையும் பார்க்காமல் செல்வதில்லை.
அந்த வரிசையில் தற்போது ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடமும், ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்டத்து இல்லமும் இணைந்துள்ளது. நேற்று வரை பரபரப்பாக காணப்பட்ட வேதா நிலையமும், போயஸ் தோட்டத்து சாலையும் தனது களையை இழந்து காணப்படுகிறது என்பதுதான் உண்மை.

வேதா நிலையம்
1967 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அம்மாவால் 1.32 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வீடு தான் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம். 24,000 சதுர அடி பரப்பு உள்ள இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 43.96 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த வீட்டிற்குள் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள், உதவியாளர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

வரலாற்று வெற்றி
2016 சட்டசபை தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று 4 மாதம் மட்டுமே ஆட்சிக் கட்டிலில் இருந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் 75 நாட்கள் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனிற்றி டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இந்த செய்தி அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதிமுக தொண்டர்கள்
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டுப்பக்கம் போய் ஒருமுறையாவது அந்த வீட்டு கேட்டுக்களை மட்டுமாவது பார்த்து விட வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் இப்போதைய விருப்பமாகும். ஆனால் அதற்கு கூட காலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

வேடிக்கை பார்க்க அனுமதி
ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வரும் அதிமுக தொண்டர்கள், நேராக செல்லும் இடம் போயஸ் தோட்டம்தான். இப்போது வரும் தொண்டர்களை தடுக்காமல் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து விட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஒரே ஆறுதல்.

நினைவிடமாகுமா?
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உபயோகித்த பொருட்கள் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மறைந்த முதல்வர் ஜெயலலிதா உபயோகித்த பொருட்களை வைத்து நினைவிடம் அமைக்க வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் கோரிக்கையாகும். அரசு நடவடிக்கை எடுக்குமா?












Click it and Unblock the Notifications