பெரம்பலூரில் சசிகலா கொடும்பாவி எரிப்பு- அதிமுக கிளை கழகங்கள் கலைப்பு!
பெரம்பலூரில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடும்பாவி எரிக்கப்பட்டது. அத்துடன் கிராமங்களில் அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டன.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்க அக்கட்சி தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரம்பலூரில் சசிகலா கொடும்பாவி எரிக்கப்பட்டு கிளை கழகங்கள் கலைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை அக்கட்சியின் பொதுக் குழு நியமனம் செய்துள்ளது. முறைப்படி அவர் பொதுச்செயலராக தொண்டர்களால் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நியமனத்தின் அடிப்படையில் இன்று சசிகலா அதிமுக தலைமை கழகத்தில் பொதுச்செயலராக பதவியேற்கிறார். ஆனால் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்தும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி அவரது கொடும்பாவியை எரித்தனர். அத்துடன் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக கிளை கழகங்களையும் கலைப்பதாகவும் அறிவித்தனர்.
இதேபோல் வேலூர் மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று அமைச்சர்கள் வைத்த பேனர்களில் சசிகலா படத்தை சேதப்படுத்தினர் அதிமுக தொண்டர்கள்.