ஜெ. மரணம்.. மோடிக்கு கடிதம் எழுதிய கவுதமியைக் கண்டித்து 4 அதிமுகவினர் போராட்டம்!
நடிகை கெளதமி உருவமொம்மைய எரித்து திருச்சியில் அதிமுகவினர் போராட்டம்
திருச்சி: ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு, நடிகை கெளதமி கடிதம் எழுதியதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் அதிமுகவினர் உருவபொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டன. இதனிடையே நடிகை கவுதமி, ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், பல மர்மங்கள் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை தீர்க்க பிரதமர் மோடி முன்வர வேண்டும். ஒரு மாநில முதல்வரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமையுண்டு. ஒரு தனிப்பட்ட நபரின் மரணமாக இருந்தால், அது குறித்து அறிந்துகொள்ள எங்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் கவுதமி குழப்பத்தை ஏற்படுத்துவதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகை கவுதமியை கண்டித்து திருச்சியில் 4 அதிமுக தொண்டர்கள் அவரது உருவமொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.