ராஜ்யசபா தேர்தல்- போட்டியின்றி தேர்வாகிறார் அதிமுகவின் நவநீதகிருஷ்ணன்
சென்னை: மாநிலங்களவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நவநீத கிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
திமுகவைச் சேர்ந்த செல்வகணபதி டெல்லி மேல் சபை எம்.பி.யாக இருந்தார். ஊழல் வழக்கு விசாரணையில் அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த பதவி காலியானது.
இதையடுத்து அந்த இடத்திற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. இதனையடுத்து அதிமுக சார்பில் வேட்பாளராக நவநீதகிருஷ்ணனை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தலைமை செயலகத்தில் கடந்த வாரம் நவநீதகிருஷ்ணன், சட்டசபை செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான ஜமாலுதீனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் தவிர 3 சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தது. இதில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. மனுக்களை வாபஸ் பெற வரும் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இதில் சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேரின் மனுக்களை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியாத காரணத்தினால் அவை ள்ளுபடி ஆகும். மற்ற அரசியல் கட்சிகள் யாரும் வேட்பாளர்களை நிறுத்தாததால் அதிமுக வேட்பாளர் நவநீத கிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவிற்கு திமுக தானாக முன்வந்து ஒரு எம்.பி. பதவியை விட்டுக் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகின்றது.