காஞ்சியில் அரசு பஸ்ஸை எரித்த "புல்லட்" பரிமளம் கைது - "ஜெ. விடுதலை" என பேனர் கட்டியவர்!
காஞ்சிபுரம்: ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் வெடித்த வன்முறையின்போது காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புல்லட் பரிமளம் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர் காஞ்சிபுரம் நகராட்சி அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர் ஏற்கனவே சர்ச்சைப் பேர்வழி ஆவார். அடிக்கடி பிரமாண்ட பேனர்களையும், பிளக்ஸ் போர்டுகளையும் வைத்து காஞ்சிபுரத்தை பரபரப்பில் ஆழ்த்துவது இவரது பாணியாகும். இதற்காக பலமுறை இவர் போலீஸாரால் எச்சரிக்கப்பட்டவரும் கூட.

இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்தை எரித்து அதிமுகவினர் அட்டகாசம் செய்தனர். அதில் அந்தப் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தசம்பவம் தொடர்பாக புல்லட் பரிமளத்தைக் கைது செய்துள்ளனர் போலீஸார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே, சில நாட்களுக்கு முன்பு இவர் காஞ்சிபுரத்தில் பிரமாண்டமான பிளகஸ் போர்டு ஒன்றை வைத்திருந்தார். அதில், அம்மா விடுதலை, அம்மா விடுதலை என்று நூற்றுக்கணக்கான அம்மா விடுதலை வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் காஞ்சிபுரத்தில் பதட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் தலையிட்டு அவரைப் பிடித்து விசாரித்து எச்சரித்தனர். பிளக்ஸ் போர்டும் அகற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications