அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை... நேரில் பார்த்த மனைவிக்கும் வெட்டு : நெல்லையில் பதட்டம்
நெல்லை: அதிமுக கவுன்சிலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்டதால் நெல்லையில் பதட்டம் நிலவுகிறது.
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. அதிமுகவை சேர்ந்த இவர் ராமையன்பட்டி பஞ்சாயத்தில் 4வது வார்டு கவுன்சிலரான இசக்கிமுத்து, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை இசக்கி முத்து தனது மனைவி சொர்ணமணியுடன் ராமையன்பட்டி சிவாஜி நகரில் உள்ள உறவினரை பார்க்க பைக்கில் சென்றார். வேப்பங்குளம் விலக்கு சங்கரன்கோவில் ரோட்டில் வந்த போது 3 பைக்குகளில் வந்த 6 பேர் அவரை வழிமறித்தனர்.
இதனை பார்த்த அவர் பைக்கை போட்டு விட்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சராமரியாக வெட்டியுள்ளனர். கணவர் வெட்டிக் கொல்லப் படுவதை நேரில் பார்த்து, அதனை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த இசக்கிமுத்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கவுன்சிலர் வெட்டிக் கொல்லப் பட்ட தகவல் வேப்பங்குளத்து மக்களுக்கு தெரிய வந்ததையடுத்து அங்கு பதட்டம் உண்டானது. கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தாழையூத்து டிஎஸ்பி கலவிரதன், மானூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன்படி, இசக்கிமுத்துவுக்கும், மற்றொரு பிரிவை சேர்ந்த ஓருவருக்கும் இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
ராமையன்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் 23.3.2014ல் தன்னை தாக்கியதாக இசக்கிமுத்து மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை மிரட்டியுள்ளனர். இதுதான் கொலையில் போய் முடிந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக சிவாஜி நகரை சேர்ந்த வெள்ளைபாண்டியன் மகன் அருணாசலம், பெருமாள் மகன் முருகன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு அவர்களை தேடி வருகின்றனர்.