மத்திய அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளையே ஆதரிக்கும் அதிமுக, திமுக.. சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
கடலூர் : மத்திய ஆட்சியாளர்களின் மக்கள்விரோதக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அதிமுக அரசு, முந்தைய திமுக அரசு இரண்டுமே ஒரே மாதிரியான அணுகுமுறையையே கொண்டுள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
சமூகப் பிரச்சனைகளை இந்த இரண்டு கட்சிகளுமே எடுத்துக் கொண்டு அதற்காக போராடுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பில் கடலூரில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு நிறைவுரையாற்றி பேசியதாவது...
ஆர்எஸ்எஸ் திட்டப்படி இயங்குகிற பாஜக மத்திய ஆட்சியில் இருப்பதால் சாதி ஆணவக் கொலைகளும், கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளும் புதிய உத்வேகத்துடன் செயல்படுகின்றன. சமூக ஒடுக்குமுறை கலாச்சாரம் வலுப்பெறுவது அண்மைக்கால அரசியல் சூழலில் அதிகரித்து வருகிறது.
அதுவே ஆணவக் கொலைகளாகவும், சாதிய கட்டப் பஞ்சாயத்துகளாகவும் நாடு முழுவதும் பிரதிபலிக்கிறது. சமூகநீதிக்கான இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். இதன்மூலம் மேல் சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயல்கிறார்கள். மோடி அரசோ இதை கண்டிப்பதற்கு மாறாகஆதரவாக செயல்படுகிறது.
ஒரே ஆண்டுக்குள் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்று வந்தார் பிரதமர் மோடி. இதுவரை 25 முறை வெளிநாடு சென்று வந்தவர் பெரும் வாக்குறுதிகளை அள்ளிவிட்டிருக்கிறார். ஆனால் உண்மை நிலை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை நின்றபாடில்லை. எதிர்க்கட்சிகளின் உறுதியான எதிர்ப்பால் நிலம் கையகப்படுத்தல் சட்ட முன்வரைவு பரணில் தூக்கி போடப்பட்டுள்ளது.
திட்டக்குழுவை மோடி அரசு கலைத்துவிட்டதால் மாநிலங்கள் தங்கள் தேவைகளை எடுத்துரைப்பதற்கான சரியான அமைப்பு இல்லாமல் போயிருக்கிறது. ஆனால் டிஜிட்டல் இந்தியா பற்றி பேசுகிற பிரதமர், அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
சிலிக்கான் பள்ளத்தாக்கு உட்படஉலக அளவில் மென்பொருள்துறையில் இந்திய இளைஞர்கள்தான் அதிகமாக பங்களிக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மாறாக ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களின் வர்த்தக தூதர் போல செயல்படுகிறார் பிரதமர். 2014 தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை .
மத்திய ஆட்சியாளர்களின் மக்கள்விரோதக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அதிமுக அரசு, முந்தைய திமுக அரசு இரண்டுமே ஒரே மாதிரியான அணுகுமுறையையே கொண்டுள்ளன. சமூகப் பிரச்சனைகளை இந்த இரண்டு கட்சிகளுமே எடுத்துக் கொள்வதில்லை; அதற்காக போராடுவதில்லை எனவம சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.