ஒரே விமானத்தில் பயணித்த ஓபிஎஸ், விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி- மீண்டும் இணைப்பு முயற்சி?
அதிமுகவின் மூன்று கோஷ்டிகளும் மீண்டும் இணைப்பு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.
சென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைவது சாத்தியமே இல்லை என்ற நிலையில் திடீரென அதிமுகவின் 3 கோஷ்டியை சேர்ந்த ஓபிஎஸ், விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் திருச்சிக்கு ஒரே விமானத்தில் பயணித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனிடையே எடப்பாடி தலைமையிலான அரசை ஊழல் அரசு என ஓபிஎஸ் விமர்சித்தார். இதையடுத்து ஓபிஎஸ்தான் ஊழல்வாதி என எடப்பாடி தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

தினகரன் அறிவிப்புகள்
இந்த களேபரங்களுக்கு மத்தியில் தீவிர அரசியலுக்கு மீண்டும் திரும்பினார் தினகரன். அவர் தடாலடியாக அதிமுக அம்மா அணியின் நிர்வாகிகளை அறிவித்தார்.

எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
இதற்கு எம்.எல்.ஏ.க்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் தினகரன் தரும் பதவியை ஏற்க முடியாது என அறிவித்தனர். இதனால் அதிமுக ஓபிஎஸ், எடப்பாடி, தினகரன் கோஷ்டி என 3 ஆக பிளவுபட்டது உறுதியானது.

மீண்டும் பேச்சுவார்த்தை
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று திடீரென எடப்பாடி கோஷ்டியின் அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ஆகியோரை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். சென்னை விமான நிலைய அறையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

திருச்சி பயணம்
இதனைத் தொடர்ந்து மூவரும் ஒரே விமானத்தில் திருச்சிக்கு பயணித்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அணிகள் இணையும்வரை தர்ம யுத்தம் தொடரும் என கூறினார்.

தாக்க முயற்சி
அப்போதுதான் சோலைராஜன் என்பவர் ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் நடைபெற்றது. அதிமுக அணிகள் இணையவே சாத்தியம் இல்லை என்கிற நிலையில் தற்போது 3 கோஷ்டியினரும் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளதும் ஒரே விமானத்தில் பயணித்திருப்பதும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications