தினகரனுடன் சிக்கியது 'மல்லி' என்கிற மல்லிகார்ஜூனா.. குலைநடுக்கத்தில் அதிமுக கோஷ்டிகள்
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுடன் சிக்கியது மல்லி என அழைக்கப்படுகிற மல்லிகார்ஜூனா என்பதால் அதிமுக கோஷ்டிகளின் தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனராம்.
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரனுடன் சிக்கிய மல்லிகார்ஜூன குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புரோக்கர் சுகேஷ் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் தினகரன் என்பது வழக்கு. இதில் தினகரன் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.

மல்லிகார்ஜூனா
தினகரனை இன்று சென்னை அழைத்து வந்து டெல்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். டிடிவி தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினகரனுக்காக
இந்த மல்லிகார்ஜூனாதான் தினகரனுக்காக டெல்லியில் புரோக்கர் சுகேஷிடம் பணம் கொடுத்தவர் என்கிறது டெல்லி போலீஸ். தினகரனுடன் கைது செய்யப்பட்ட மல்லிகார்ஜூனா யாரோ என நினைத்துக் கொண்டிருந்தனர் அதிமுக தலைவர்கள்.

அந்த மல்லிதான்
ஆனால் தினகரனின் நீண்டகால நண்பராக 'மல்லி' என அறியப்பட்ட மல்லிகார்ஜூனாதான் சிக்கியது என தெரியவந்ததில் அதிமுகவின் இரண்டு கோஷ்டி தலைவர்களுமே அதிர்ந்து போய்விட்டனராம். அதிமுகவினரைப் பொறுத்தவரையில் தினகரன் என்றால் 'மல்லி' என்கிற அளவுக்கு செல்வாக்கு பெற்றவராக இருந்திருக்கிறார்.

தப்ப முடியாதாம்..
மல்லி என மட்டுமே அழைக்கப்பட்ட மல்லிகார்ஜூனாதான் தினகரனுக்கு ஆல் இன் ஆல் என்கிறது அதிமுக வட்டாரங்கள். தினகரனின் அத்தனை பணப் போக்குவரத்தையும் முழுமையாக கவனித்து வந்ததும் இந்த மல்லிதானாம். மல்லியை டெல்லி போலீஸ் வளைத்திருப்பதன் மூலம் தினகரன் அவ்வளவு எளிதில் தப்பிவிட முடியாது என்றே கூறுகின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications