'தீயசக்தி'யை மறந்த அதிமுகவினர்....'கலைஞர்' என்று அழைத்த அதிசயம்
திமுக தலைவர் கருணாநிதியை கடந்த பல ஆண்டுகளாகவே தீயசக்தி என்று அழைத்து வந்த அதிமுகவினர் திடீரென கலைஞர் என்று அழைத்து தமிழக அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சென்னை: அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று சூரியன் படத்தில் சொல்வார் கவுண்டமணி. அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். ஆனாலும் தமிழக அரசியலில் திமுகவினரும், அதிமுகவினரும் பரம விரோதிகளாக இருந்தனர்.
திருச்சியில் 2010ம் ஆண்டு மிக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
கருணாநிதியை திருக்குவளை தீயசக்தி என்று புதிய பட்டப்பெயர் சூட்டி அழைத்தார் ஜெயலலிதா. தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த வார்த்தையை பயன்படுத்தினார். ஜெயலலிதா சொன்ன வார்த்தையை அப்படியே பயன்படுத்தினர் அதிமுகவினர்.

கலைஞர் கருணாநிதி
திமுகவின் முதுபெரும் தலைவரான கருணாநிதியை, திமுக தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கலைஞர் என்றுதான் அழைப்பார்கள். அது அவருக்காக புனைப்பெயர் மட்டுமல்ல அவருக்கு அளிக்கும் மரியாதை. ஆனால் அதிமுகவினர் கருணாநிதியை பல பட்டப்பெயர்களில் அழைப்பது வாடிக்கை.

திருக்குவளை தீயசக்தி
கருணாநிதி என்று பெயர் சொல்வதோடு தீயசக்தி என்று குறிப்பிட்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2016ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற பின்னர், ஜெயலலிதாவின் அணுகுமுறையும், எதிர்கட்சியினருடன் பேசும் முறையும் சற்றே மாறியது. திரு. கருணாநிதி என்று சட்டசபையில் பேசத் தொடங்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் மரணம்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் மரணமடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போது திமுக பொருளாளர் ஸ்டாலின் நேரில் வந்து நலம் விசாரித்தார். ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியும் இரங்கல் செய்தி வெளியிட்டார். தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றமாக பேசப்பட்டது.

கருணாநிதி உடல் நிலை
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய திமுக தலைவர் கருணாநிதிக்கு, திடீரென மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அதனையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், நோய்த் தொற்று மற்றும் மூச்சு திணறலுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டு அவர் நலமாக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதிமுகவினர் நலம் விசாரிப்பு
லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலன் குறித்து விசாரித்தனர்.

கலைஞர் கருணாநிதி
மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதவாது: சின்னம்மாவின் வழிகாட்டுதல் படி, அவரது சார்பிலும், அதிமுக சார்பிலும் இங்கு வந்து திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தோம். அவர் நலமாக இருக்கிறார். இது மகிழ்ச்சியான செய்தி. அவர் விரைவில் வீடு திரும்ப வாழ்த்துக்கள் என்றார்.

ஜெயலலிதா உடன் மறைந்த தீயசக்தி
தீயசக்தி என்ற வார்த்தையையும் பட்டத்தையும் திருச்சி கூட்டத்தில் பயன்படுத்தினார் ஜெயலலிதா. கடந்த 5ம் தேதி மறைந்த உடன் அவர் கருணாநிதியை அழைக்க பயன்படுத்திய தீயசக்தி என்ற வார்த்தையும் மறைந்து போனது. பகையாளிகளாக இருந்தவர்கள் மீண்டும் பங்காளிகளாக மாறி வருகின்றனர். இந்த நிலையில்தான் முதுபெரும் தலைவரை கலைஞர் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications