டிச.29-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது- சசிகலா பொதுச்செயலராக தேர்வு?
சென்னையில் டிசம்பர் 29-ந் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடும் என அக்கட்சி தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ந் தேதி கூடுகிறது. இக்ககூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வமே அதிமுக பொதுச்செயலராவார் எனக் கூறப்பட்டது. ஆனால் திடீரென ஜெயலலிதாவின் தோழி சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலராக்கும் முயற்சியில் இறங்கினார். நாள்தோறும் அதிமுக நிர்வாகிகள், ஜாதி சங்கங்களின் நிர்வாகிகள் பலரும் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு சசிகலாவிடம் நீங்களே பொதுச் செயலராகுங்கள் என கோரிக்கை விடுக்கும்படி சொல்ல வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டங்கள் நடைபெறுகின்றன. கூட்டத்தில் பங்கேற்க 2,770 நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் இல்லாததால் சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.
இந்த பொதுக்குழுவில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலராக தேர்வு செய்யப்படக் கூடும் என தெரிகிறது. அதே நேரத்தில் சசிகலா எதிர்ப்பு அணியினர் அதே நாளில் பகிரங்கமாக போர்க்கொடி தூக்குவர் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications