நடிகர் மனோபாலா மறைவு.. அதிமுகவுக்காக அவ்வளவு வேலை செய்திருக்கிறார்! எடப்பாடி பழனிசாமி உருக்கம்
சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோபாலா அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் என்றும், அவரது மறைவு அதிமுகவுக்கும் சினிமா துறையினருக்கும் பேரிழப்பு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும்,தலைமை கழக பேச்சாளரும் ஆன திரு.மனோ பாலா அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல் அவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி விரிவான இரங்கல் குறிப்பையும் வெளியிட்டு உள்ளார். அதில், "தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளரும். திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
நடிகர் திரு. மனோபாலா அவர்கள் 'ஆகாய கங்கை' என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கியதோடு, தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும், பல்வேறு திரைப்படங்களில் நடித்து, மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவரும், பழகுவதற்கு இனிமையானவரும் ஆவார்.

நடிகர் திரு. மனோபாலா அவர்கள், கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு, தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளை நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையோடு பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து, சிறந்த முறையில் கழகப் பணிகளை ஆற்றியவர். தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும்.
அன்புச் சகோதரர் நடிகர் திரு. மனோபாலா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications