மன்னார்குடி கோஷ்டிக்கு ஓபிஎஸ் செம சூடு! அதிமுகவின் பொதுச்செயலர் பதவி காலியாக உள்ளதாக அறிவிப்பு!
அதிமுகவின் பொதுச்செயலர் பதவி காலியாக உள்ளது; முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவி காலியாக உள்ளதாகவும் இன்னமும் முறைப்படி பொதுச்செயலர் தேர்வு செய்யப்படவில்லை எனவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதால் மன்னார்குடி கோஷ்டி அதிர்ந்து போயுள்ளது.
அதிமுகவின் கணக்குகளை முடக்கக் கோரி வங்கிகளுக்கு இன்று முதல்வரும் அதிமுகவின் பொருளாளருமான ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், அதிமுக பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அப்பதவி காலியாக உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச்செயலர் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை. பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள்தான் கட்சியை நிர்வகிக்க முடியும். ஆகையால் அதிமுக பொருளாளர் என்ற அடிப்படையில் என் அனுமதியின்றி எந்த பரிவர்த்தனையும் அதிமுக வங்கிக் கணக்குகளில் நடைபெறக் கூடாது என தெரிவித்துள்ளார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
அதிமுகவின் கட்சி விதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களுடன் பொது உறுப்பினர்களும் சேர்ந்துதான் பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியும். தற்போது சசிகலா 'தற்காலிக' பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவிதிகளின் படி இடைக்கால அல்லது தற்காலிக பொதுச்செயலரை நியமிக்க முடியாது; இதற்கு அதிமுக கட்சி விதிகளில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியிருந்தன. இந்த நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அதிமுக பொதுச்செயலர் பதவி காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது சசிகலாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.