புதிய வாக்காளர்களில் 36% பேர் அதிமுகவிற்கு ஆதரவு... இது குமுதம் ரிப்போர்டர் சர்வே
சென்னை: சட்டசபை தேர்தலில் புதிதாக வாக்களிக்கப் போகும் வாக்காளர்களில் 36% பேர் அதிமுகவிற்கே தங்களின் ஆதரவு என்று கூறியுள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக, திமுகவிற்கு என தனித்தனியாக வாக்கு வங்கிகள் இருந்தாலும் ஆட்சியை தீர்மானிப்பது கூட்டணியும், நடுநிலை வாக்காளர்களும், முதன்முறையாக வாக்களிக்கப் போகும் புதுமுக வாக்காளர்களும்தான்.
கடந்த சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் அதிமுகவின் மகத்தான வெற்றிக்கு அதிகம் கைகொடுத்தது முதன்முறையாக வாக்களித்த வாக்காளர்கள்தான். 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் 64 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர். இதில் 40 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்று திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டாலும், அதை தேர்தல் ஆணையம் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது பற்றி ஊடகங்கள் பல கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. அதில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா?, முதல்வர் வேட்பாளர்களில் புதுமுகங்களுக்கு ஆதரவு யாருக்கு? புதுமுக வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு என்பன உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்தது ரிப்போர்ட்டர். இதற்கு வாக்காளர்கள் அளித்த பதில்களை உங்களுக்கு தருகிறோம் படியுங்கள்.

தனிக்கட்சிக்கு ஆதரவு
தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சிதான் நடைபெற வேண்டும் என்றும் அதுதான் நல்லது என்றும் 63.59 சதவிகித வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டணி ஆட்சிக்கு 36.41% சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது கூட்டணி ஆட்சி கோஷமிட்ட மக்கள் நலக்கூட்டணியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.

முதல்வர் வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர்கள் அதிகரித்து விட்டனர். கருணாநிதி, ஜெயலலிதா தவிர விஜயகாந்த், வைகோ, அன்புமணி, நல்லக்கண்ணு, பொன்னார், சீமான், திருமாவளவன், குஷ்பு, ஆகியோரை முதல்வர் வேட்பாளர்களாக பட்டியலிட்டு யாருக்கு ஆதரவு என்று கேட்கப்பட்டது.

விஜயகாந்த், வைகோ
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 13.7% பேரும், வைகோவிற்கு 9.10% பேரும் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் அன்புமணி ராமதாசுக்கு 8.35%, நல்லக்கண்ணுவிற்கு 6.95%, பொன். ராதாகிருஷ்ணனுக்கு 5.78% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சீமான், குஷ்பு
சீமானுக்கு 3.40%, திருமாவளவன் 2.37%, குஷ்பு 1.13% பேர் ஆதரிப்பதாக கருத்து கூறியுள்ளனர். இவர்களில் யாருமில்லை என்று 46.29 % பேரும், கருத்து கூற விரும்பவில்லை என்று 3.92% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவிற்கு ஆதரவு
முதன்முறையாக வாக்களிக்கப் போகும் வாக்காளர்களில் அதிமுகவிற்கு 35.61% பேரும், திமுகவிற்கு 27.42% பேரும் ஆதரவு கூறியுள்ளனர். பாமகவிற்கு 7.78% பேரும், தேமுதிகவிற்கு 6.68% பேரும் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.

பாஜக, நாம்தமிழர், காங்கிரஸ்
பாஜகவிற்கு 5.46% பேரும் காங்கிரஸ் கட்சிக்கு 4.64% பேரும், நாம் தமிழருக்கு 4.64% பேரும் ஆதரவு கூறியுள்ளனர். இதர கட்சிகளுக்கு வாக்களிப்போம் என்று 5.1% பேர் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நலக்கூட்டணி
அதே நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவிற்கு 0.41% பேர் விசிகவிற்கு 1.91% பேர், கம்யூனிஸ்ட்களுக்கு 0.41% பேர் ஆதரவு கூறியுள்ளனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வாசனின் தமாகாவிற்கு 0.30%பேர் மட்டுமே வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

சர்வே சொல்வது என்ன?
குமுதம் ரிப்போர்ட்டர் சர்வேபடி பார்த்தால் வாக்காளர்கள் கூட்டணி ஆட்சிக்கோ, புதிய கூட்டணிக்கோ ஆதரவு தருவதாக கூறவில்லை. தெரியாத தேவதையை விட தெரிந்த பேய் மேல் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?












Click it and Unblock the Notifications