பதவிதான் முக்கியம்... "சாஷ்டாங்கமாக பாஜகவின் காலில் விழுந்த" எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும்!
மக்களைவிட பணம், பதவி, ஆட்சி, அதிகாரம்தான் முக்கியம் என்பதை அதிமுகவின் இரு அணிகளும் நிரூபித்து விட்டன.
சென்னை: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் என்று தெரிந்தும், தமிழகத்துக்கு பாஜக துரோகம் இழைத்து வருவதும் தெரிந்தும் அதை கண்டிக்க திராணியற்று அதிமுகவின் இரு அணிகளும் பணிந்து போய்விட்டது மக்களிடையே வருத்தம் அளிக்கிறது.
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மதசார்பற்ற வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தாங்கள் ஆதரிக்க தயார் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்தன.
ஆயினும் ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்ட பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதபதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவர் தலித்தாக இருந்தாலும் மதவாத கட்சியை சேர்ந்த வேட்பாளரை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசித்தன.

மீராகுமார் தேர்வு
இதைத் தொடர்ந்து லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை வேட்பாளராக அறிவித்தது எதிர்க்கட்சிகள். ராம்நாத்துக்கு தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், லோக் ஜனசக்தி, சிவசேனா உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தர ஒப்புக் கொண்டன.

அதிமுக நேற்று முடிவு
அதிமுகவின் இரு அணிகளும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதுதான் மாபாதக விஷயமாகும். மத்திய அரசின் திட்டங்களை எள்ளளவும் எதிர்க்காமல் இருந்த அதிமுக பாஜகவின் பிடியில் உள்ளதாக மற்ற கட்சிகள் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பதை தற்போது நிரூபித்துவிட்டன. எடப்பாடி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாக கூறி இன்று ராம்நாத்துக்கு பூங்கொத்து கொடுக்க சென்றுவிட்டனர்.

துரோகம் மறந்துவிட்டதா
சரி, விவசாயிகள், ஹைட்ரோ கார்பன், மீனவர்கள், நீட் தேர்வு, மாட்டிறைச்சி உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகமே இழைத்துவிட்டது. மேலும் தாங்கள் திராவிட கட்சி என்று கூறிக் கொண்டு ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ஒருவர் ஆதரிப்பது எந்த விதத்தில் நியாயம். பதவி,பணம், ஆட்சி, அதிகாரத்துக்காக தமிழர்களை அடகு வைத்து விட்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரிப்பதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஜெ.இருந்திருந்தால்...
சிபிஐ, வருமான வரி துறை ரெய்டு, ஊழல் வழக்கு உள்ளிட்டவைகளில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டி அதிமுக அரசு இவ்வாறு செயல்படுகிறது. ஜெயலலிதா இக்கட்டான சூழ்நிலைகளில் அநியாயம் என்றால் அது யாராக இருந்தாலும் பணிந்ததே இல்லை. அவரது நண்பர் நரேந்திர மோடி என்றாலும் கடந்த லோக்சபா தேர்தலில் அந்த மோடியா இந்த லேடியா என்று கர்ஜித்தார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட கம்பீரத்துடன் பெண் சிங்கமாக வலம் வந்த ஜெயலலிதாவின் கட்சியினருக்கு அவரிடன் துணிவில் குறைந்தபட்சமாவது இருக்க வேண்டாமா என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மக்கள் பிரதிநிதியா
வறட்சியால் வாடி வரும் விவசாயிகள் நிர்வாணமாக ஓடியும் மனம் இறங்காமல் இருந்தது மத்திய அரசு. மற்ற மாநில விவசாயிகள் அவர்களின் நிலை கண்டு வேதனைப்பட்டனர். மக்களுக்கு பணியாற்றுவதற்காகத்தானே இவர்களை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் இவர்களோ தங்கள் நலனுக்காக பாடுபடுகின்றனர். எடப்பாடிதான் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள சாஷ்டாங்கமாக விழுந்து விட்டார் என்றால், மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்த ஓபிஎஸ் அணியினரும் இப்படி பதவிக்காக மாறிவிட்டனரே என்பதை நினைக்கும் போது எம்ஜிஆரால் தொடங்கி, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுகவின் சகாப்தம் முடிவுக்கு வந்து விடும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கோரிக்கைகள்
தமிழக அரசு சார்பில் எடப்பாடி பக்கம் பக்கமாக எழுதிய கடிதங்களில் உள்ள கோரிக்கைகளில் 1 சதவீதம்கூட நிறைவேறவில்லை. இந்த நிலையில் மோடி போன் போட்டு கேட்டதும் வரிந்து கட்டி கொண்டு ஓடியுள்ள முதல்வரை என்னவென்று சொல்வது. ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு இருக்கும் ஆதங்கங்கள் அதிமுகவுக்கு இல்லையே. எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, மணி..... அவ்வளவுதான்.












Click it and Unblock the Notifications