கூவத்தூரில் கும்மியடித்து தமிழகத்தை கூவமாக மாற்றியதுதான்.. அதிமுக அரசின் ஓராண்டு பெரும் சாதனை!
2011-ஆம் ஆண்டு மக்கள் இரண்டாவது முறையும் சிம்ம சொப்பனத்தை அளித்த போதிலும் கடந்த ஓராண்டில் அதிமுக அரசு செய்த சாதனை கூவத்தூர் கும்மிதான்.
சென்னை: 2011-ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சாதனைகளை கருத்தில் கொண்டு, மக்கள் அவருக்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து வாக்களித்தனர். ஆனால் அவரும் இப்போது இல்லை. இந்த ஆட்சியிலும் அவலங்களின் எண்ணிக்கைக்கு முடிவே இல்லை.
2011ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவின் அந்த ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் மக்களைக் கவர்ந்ததால் 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் மக்கள் அவரது கையில் ஆட்சியைக் கொடுத்தனர்.
அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களைச் சென்றடைந்தன. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி அலங்கோலமாகி விட்டது. தமிழகமே அல்லாடிக் கொண்டுள்ளது இவர்களிடம் சிக்கி.
சாதனைகள் என்ன?
தாலிக்குத் தங்கம், மகப்பேறு கால நிதியுதவி, அம்மா உணவகம், அம்மா பல்பொருள் அங்காடி, அம்மா மருந்தகம், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி, இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், இலவச ஆடு, மாடுகள், அம்மா சிமென்ட், அம்மா தண்ணீர் (குடிநீர்) உள்ளிட்ட பல்வேறு கணக்கிடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவற்றில் அம்மா உணவகத்தை யாராலும் மறக்க முடியாது. கூலித் தொழிலாளிகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.15 செலவழித்தால் போதும் நல்ல வயிறார உண்ணலாம். ஆங்காங்கே தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஏராளமான மக்கள் பயன்பெற்றனர். இந்த திட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாவது முறையும்...
ஜெயலலிதாவின் திட்டங்களால் வெகுவாக கவரப்பட்ட அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர குடும்பத்தினர் வரை அவருக்கு இரண்டாவது முறையாக வாக்களித்து அழகு பார்த்தது. கடந்த ஆண்டு மே 23-ஆம் தேதி அவர் பதவியேற்றார். இருந்தும் 4 மாதங்கள் மட்டுமே நிலைத்தார். உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அதன் பின்னர் நடந்த கூத்துகள் இருக்கே அப்பப்பா... ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவிடம் வலிய சென்று அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஒருங்கிணைந்திருந்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் வழங்கினர். அதோடு விட்டாரா சசிகலா, தன் ஆதரவாளர்களை தூண்டி விட்டு முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார்.
விளைவு என்ன?
பதவிக்கு வெறியாட்டம் போட்டு எத்தனை தகிடுதத்தம் போட்டார். சந்திரமுகி இரண்டாம் பாகம் போல் ஜெயலலிதாவின் ஜெராக்ஸாக மாற நினைத்தார். அதன்படி நடை, உடை, பாவனை, கையெழுத்து என தன்னை மாற்றிக் கொண்டார். பின்னர் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை நிர்பந்தித்து ராஜினாமா செய்ய வைத்தார். அதன் விளைவு, சசிகலாவை எதிர்த்து ஜெ.சமாதியில் தியானம் செய்தார். அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா அணியில் 122 எம்எல்ஏ-க்களும், ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏ-க்களும் இருந்தனர்.
கூவத்தூர் கூத்துகள்
ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்குள் எங்கே ஆதரவு எம்எல்ஏ-க்களை ஓபிஎஸ்ஸோ அல்லது எதிர்க்கட்சியினரோ விலைக்கு வாங்கி விடபோகின்றனர் என்ற பயத்தில் எம்எல்ஏ-க்கள் கூவத்தூரில் சசிகலா சிறைபிடித்தார். அதன் பின்னர் சசிகலா எனும் நான் என்று கூறி கூறி ஒத்திகை பார்த்த சசிகலாவுக்கு பேரிடி காத்திருந்தது. அதுதான் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு. இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழுத் தலைவராகவும், அதிமுக துணை பொதுச் செயலாளராக தினகரனையும் நியமித்துவிட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
இதைத் தொடர்ந்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பின்னர் தினகரனின் தலையீடு கட்சி, ஆட்சியில் இருந்ததால் டென்டர் விடுவது என எல்லாவற்றிலும் சுணக்கம் காட்டி வந்தார் எடப்பாடி. பின்னர் ஆர்.கே. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு சசிகலா அணி சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். இரட்டை இலை சின்னத்துக்கு போட்டியிட்டதில் அச்சின்னம் முடக்கப்பட்டது. தினகரனும் முதல்வர் கனவில் மிதந்து பணப்பட்டுவாடா செய்ததால் தமிழகத்தில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டதால் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததால் தினகரன் சிறை சென்றார்.
செயலற்ற அரசு
அதிமுக அரசின் அமைச்சர்களான அமைச்சர் விஜயபாஸ்கர், சரோஜா, காமராஜ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் முதல்வர் எடப்பாடியால் எதுவும் செய்யமுடியவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது வருமான வரித்துறை அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. அதற்கு முயற்சித்த முதல்வருக்கு விஜயபாஸ்கர் கூறியது, உங்களோட தில்லு முல்லை எடுத்து விடவா என்றார். அவ்வளவுதான் முதல்வர் கப்சிப் என்றாகிவிட்டார்.
மெத்தன போக்கு
முதல்வராக பதவியேற்று 1,570 கோப்புகளில் கையெழுத்திட்டதாக முதல்வர் கூறினாலும் வளர்ச்சி பணிகளுக்காக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை செய்ததை காட்டிலும் தங்கள் பதவியையும் ஆட்சியையும் தக்க வைத்து கொள்ள அவர்கள் ஆலோசனை நடத்தியதுதான் அதிகம். இதனால் விவசாயிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்திய அரசை பகைத்து கொள்ளாமல் மீதமுள்ள 4 ஆண்டுகளை எப்படி கடத்தலாம் என்று கணக்கிட்டு வருகிறது அதிமுக அரசு.
நம்பிக்கை துரோகம்
இரட்டை இலை சின்னம், வேட்பாளர் யார் என்றும் பாராமல் ஜெயலலிதாவுக்காக வாக்களித்தவர்கள் ஏராளம். ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் அளித்த சிகிச்சையில் வெளிப்படைத்தன்மையின்மை, சசிகலாவின் வெறியாட்டம், மக்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பது, ரேஷன் பொருள்கள் கொள்முதல் செய்ய டென்டர் விடுவதில் தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் இன்றுடன் அதிமுக ஆட்சி வந்து ஓராண்டு நிறைவுபெற்றுவிட்டது. ஆனால் தண்ணீர் பஞ்சம், மதுவிலக்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்கவில்லை. மேலும் ஒரு வாக்குக்கு 3 முதல்வர்களை பார்த்த தமிழகம் இன்னும் 4 ஆண்டுகளில் எத்தனை பேரை பார்க்குமோ என்ற அதிருப்தி நிலவுகிறது. மொத்தத்தில் ஓட்டுபோட்ட மக்களுக்கு அதிமுகவினர் நாமத்தை போட்டுவிட்டனர்.
ஜெயலலிதா இருந்திருந்தால்!
ஜெயலலிதா இருந்திருந்தால் ஊழல் புகாரில் சிக்கியவர்களை அமைச்சராக பதவியில் நீடித்திருக்க விட்டுருப்பாரா? என்பது பொதுமக்களின் ஆதங்கம். மதுவிலக்கு போராட்டத்தின் போது திருப்பூரில் பெண் என்றும் பாராமல் போலீஸார் அதிகாரி ஒருவர் அவரது கன்னத்தில் அறை விட்டிருப்பாரா?, தண்ணீருக்காகவும், மதுவிலக்குக்காகவும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட வைத்திருப்பாரா? என்றே யோசிக்க வைக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தமிழக அரசு அவசர சிகிச்சை பிரிவில் ஊசலாடி வருகிறது.
செய்வீர்களா! செய்வீர்களா!! என்று கேட்டார் ஜெயலலிதா.. இப்படி செய்றீங்களேய்யா என்று மக்கள் அதிமுக ஆட்சியைப் பார்த்துப் புலம்பிக் கொண்டுள்ளனர்.