ஜானகியால் கூட முடியாததை சாதித்தவர் சசிகலா.. தினகரன் பரபரப்பு பேச்சு
Recommended Video
தாராபுரம்: எம்ஜிஆர் மறைந்த பிறகு அவரது ஆட்சியை அவரது மனைவி விஎன் ஜானகியால் கூட தக்க வைக்க முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவால்தான் இந்த ஆட்சி இன்னும் தொடர்கிறது என்று தினகரன் பரபரப்பாக பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் பேசினார். பெரும் திரளாக கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் தினகரன் பேசியதாவது:
தமிழகத்தில் அம்மாவின் பெயரை சொல்லி போலியான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அம்மா அவர்கள் இருந்தவரை விவசாயிகளை பாதிக்கின்ற எந்தவொரு திட்டத்தையும் அனுமதித்தது இல்லை. நெடுஞ்சாலை துறை திட்டங்களானாலும், பாலங்களானாலும் அது மக்களை பாதிக்கபடும் வகையில் இருந்தால் அவற்றை அம்மா எதிர்த்தார்.
அம்மா அவர்கள் விவசாயத்தை பாதிக்கின்ற மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் வரவிடாமல் தடை செய்தார்கள் ஆனால் இன்று ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசிற்கு கைகட்டி சேவகம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அவரது துணைவியர் ஜானகியம்மாளால் கூட புரட்சிதலைவரின் ஆட்சியை நிலை நிறுத்த முடியவில்லை. ஆனால் அம்மாவின் மறைவிற்கு பிறகு மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்திட சின்னம்மா அவர்கள் இருந்த காரணத்தால்தான் இந்த ஆட்சி தொடர்கிறது. அம்மாவின் மறைவிற்கு பிறகு அவரது தொண்டர்களில் 90 சதம் தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னற்ற கழகத்தில் உள்ளனர் என்றார் தினகரன்.
முன்னதாக தாராபுரம் வந்த தினகரனுக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள் அமமுகவினர். தாராபுரம் காவல்நிலையம் அருகே பலத்த ஏற்பாடுகளுடன் காத்திருந்த நிலையில் தினகரன் அப்பகுதிக்கு வந்ததும் ஆட்டம் பாட்டம் என மேளதாளங்களுடன் காத்திருந்தவர்கள் தினகரனை மலர் தூவி வரவேற்று மலர் கிரீடம், வீரவாள் போன்றவற்றை வழங்கியதை தொடர்ந்து, திறந்த வேனில் நின்று பேசினார் தினகரன்.