ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லையே.. அதிமுகவுக்கு திருநாவுக்கரசர் கொட்டு!
ஆளும்கட்சிக்கு ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்துக் கேட்கக்கூடிய தைரியமும் துணிச்சலும் அதிமுக அரசுக்கு இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகப் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.

அதற்கு கர்நாடக அரசு ஒத்துழைப்புத் தரவில்லை என்றால், மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். தேவைப்பட்டால், நீதிமன்றம் செல்லக்கூட தமிழக அரசு தயங்கக்கூடாது.
உச்சநீதிமன்றத்தின் மூலம் கிடைத்த தீர்ப்பின் வெற்றியை நழுவவிடாமல், பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதைத் தவறாது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஆளுநரின் செயல்பாடுகளைத் தட்டிக்கேட்டக்கூடிய தைரியமும், துணிச்சலும் இல்லாத கட்சியாக அதிமுக இருக்கிறது. ஆளும்கட்சி செயல்படாத நிலையில் எதிர்க்கட்சிகள்தான் அதனைச் செய்ய வேண்டும்.
கருப்புக்கொடி காட்டுவதும் ஜனநாயகத்தில் ஓர் அங்கம்தான் தமிழிசைக்கு அது தெரியவில்லை. ஒருவேளை அவர் எதிர்க்கட்சியாக இருந்தால் அதனைத் தெரிந்து கொண்டிருப்பார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications