அரசை ஆதரித்து வாக்களிக்க எம்எல்ஏக்களுக்கு அதிமுக கொறடா உத்தரவு- ஓபிஎஸ் அணிக்கு நெருக்கடி!
சென்னை: சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் கொறடா அரியலூர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று அதிமுகவின் ஓபிஎஸ் அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே அதிமுகவின் கொறடா அரியலூர் ராஜேந்திரன், அதிமுகவின் 134 எம்.எல்.ஏக்களும் நாளை சட்டசபைக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசுக்கு ஆதரவாக அனைத்து எம்.எல்.ஏக்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக இன்று கூவத்தூரில் கொறடா ராஜேந்திரன் ஆலோசனை நடத்தவும் உள்ளார். கொறடா உத்தரவை மீறி அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அவர்களது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும்.
இதனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications