அதிமுகவின் பொருளாளர் பதவியும்... சென்டிமெண்ட் சர்ச்சைகளும்....
சென்னை: கட்சியில் பொருளாளர் பதவி கிடைப்பது என்பது சாதாரண விசயமில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்ததுதான் பொருளாளர் பதவி. திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கணக்கு கேட்ட சர்ச்சையினால்தான் அங்கிருந்து நீக்கப்பட்டு அஇஅதிமுகவை உருவாக்க காரணமாக அமைந்தது. தமிழக முதல்வராகவும் ஆனார் என்பது வரலாறு.
திமுகவில் பொருளாளர் பதவியில் இருந்த கருணாநிதி, அந்த கட்சியின் தலைவரானார். பின்னர் முதல்வரானார். அதே சென்டிமென்டில் தனது மகன் ஸ்டாலினுக்கும் திமுக பொருளாளர் பதவி வழங்கி தமிழகம் முழுவதும் வலம்வர வைத்துள்ளார்.
அப்படிப்பட்ட முக்கிய பதவியாக விளங்கும் பொருளாளர் பதவி, அதிமுகவில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமில்லாத பதவியாக மாறிவிட்டதாக பேசப்படுகிறது. காரணம் அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்தவர்களின் அரசியல் அஸ்தமனமாகிப் போனதுதான்.
எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது அதிமுக பொருளாளர் பதவி தலித்துக்கு என்ற அடிப்படையில் சவுந்திரபாண்டி, துரைராஜ் போன்றோருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவரே அந்த முறையை மாற்றி பண்ருட்டி ராமச்சந்திரனை கொண்டு வந்தார். பிறகு அமைச்சராக இருப்பவருக்கு அந்த பதவி கிடையாது என திருப்பத்தூர் மாதவனை கொண்டு வந்தார்.
ஜெயலலிதா பொதுச் செயலாளரானதும் எம்ஜிஆர் பார்முலாவை தூக்கி எறிந்தார். கட்சியின் அவசர பொதுக்குழுவை கூட்டி பொருளாளர் பதவியை நியமன முறையில் மாற்றம் செய்தார். அதன்படி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இன்று அட்ரஸ் இல்லாமல் இருக்கிறார்.
அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இவரை சுத்தமாக ஓரம் கட்டி டிடிவி தினகரன் பொருளாளர் ஆனார். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர் டிடிவி தினகரன். மாநிலங்களவை உறுப்பினர், அதிமுகவின் அதிகாரமிக்க பதவியான பொருளாளர் பதவிகளை அலங்கரித்தவர். இப்போது அதிகாரம் இல்லாமல் இருக்கிறார்.
டிடிவி தினகரன்
1999ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி வேட்பாளராக ஜெயலலிதாவால் களமிறக்கப்பட்டு, வெற்றியும் பெற்றார். அடுத்தடுத்து ஏறுமுகமாக இருந்த இவருக்கு, அதிமுகவின் மாநிலப் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அ.தி.மு.கவின் அறிவிக்கப்படாத அதிகார மையம் என எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டார். உச்சகட்டமாக கட்சியினரால் ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு என்றும் கூறப்பட்டார்.
ஓபிஎஸ் அறிமுகம்
இப்படி அதிகார மையமாக இருந்தபோதுதான் இப்போது கட்சியின் பொருளாளராக உள்ள ஓபிஎஸ்ஸை தினகரன் அடையாளம் காட்டினார். டிடிவி தினகரன் பெரியகுளத்தில் தங்கியிருந்தபோது, ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி வீட்டில் குடியிருந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம்தான், ஒ.பி.எஸ்ஸை முதல்வர் நாற்காலி வரை கொண்டு சென்றது என்கிறார்கள் தேனிவாசிகள்.
ஓரங்கட்டப்பட்ட டிடிவி
2004ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைய, டிடிவி தினகரனும் அதில் தப்பவில்லை. தோல்வியடைந்தார். அடுத்தடுத்து வழக்குகள், போயஸை விட்டு வெளியேற்றம் என பல சர்ச்சைகளில் சிக்கினார். இப்படிப்பட்ட நபர் கடந்த 2012ல் போயஸ் கார்டனைவிட்டு அதிரடியாக நீக்கப்பட்டார். அத்துடன் தினகரன் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார்.
திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக உதயமாகி முதன்முதலில் அக்கட்சி 1973, திண்டுக்கலில் லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அதிமுகவின் வெற்றிக்கு உழைத்தவர்களில் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். அப்போது சீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட துணைச்செயலாளராக இருந்தார். அந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மாயத்தேவர், எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் தி.மு.க.விற்கு மாறியபோது, அதிமுகவிற்கு விசுவாசமிக்கவராக இருந்தவர்களில் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, சீனிவாசன் மாவட்டச் செயலாளராக்கப்பட்டார்.
நத்தம் விஸ்வநாதன் குரு
1989, 1991, 1998, 1999 அடுத்தடுத்து ஐந்து முறை எம்.பியாக இருந்தவர். 1987ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை திண்டுக்கல் மாவட்டச் செயலராக இருந்த போதுதான் தனக்கு துணையாக இருப்பார் என நினைத்து, நத்தம் விஸ்வநாதனை மாவட்ட துணைச் செயலாளராக்கினார்.
அதிமுக பொருளாளர்
கடந்த 2000 முதல் 2006ம் ஆண்டு வரை அ.தி.மு.க. பொருளாளராக, ஜெயலலிதாவுக்கு மிக நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் இருந்தார். திண்டுக்கல் சீனிவாசன். அப்போதுதான் மாநில பொறுப்புக்கு போனதால், தனக்கு நம்பிக்கையான நத்தம் விஸ்வநாதனை மாவட்டச் செயலாளராக பரிந்துரை செய்ததும் இவர்தான்.
டம்மியான சீனிவாசன்
குருவை மிஞ்சிய சிஷ்யனாக நத்தம் விசுவநாதன் அமைச்சராகவும், கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் கட்சியின் இரண்டாம் கட்ட முக்கியத் தலைவராகவும் செல்வாக்குமிக்கவராக உயர்ந்தார் (இப்போது ஆட்டம் குளோஸ்). ஆனால், திண்டுக்கல் சீனிவாசனோ, மாவட்ட அவைத் தலைவர் என்ற டம்மி பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளார்.
2முறை முதல்வரான ஓபிஎஸ்
2001 - 2002ல் ஐந்தரை மாதங்கள், 2014 - 2015ல் கிட்டத் தட்ட ஏழரை மாதங்கள் என்று தனது அரசியல் வாழ்வில் 12 மாதங்களுக்கு மேல் முதலமைச்சராக இருந்திருக்கிறார் ஓபிஎஸ். கடந்த ஆண்டு ஓபிஎஸை பொருளாளராக அறிவித்தார் ஜெயலலிதா. அதிமுகவின் அதிகாரமிக்க மையமாக விளங்கிய ஐவர் அணியில் முக்கியமானவராக இருந்தார்.
விடாது விரட்டு ராசி
ஆனால் பொருளாளர் ராசி இவரையும் விடவில்லை. அடுத்தடுத்து இவரின் ஆதரவாளர்கள், கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டு வருகிறார்கள், கைதுக்கும் ஆளாகின்றனர். ஓபிஎஸ் மீதான கட்சி மேலிடத்தின் நடவடிக்கைகள், அவரது அரசியல் வாழ்க்கை முடக்கிவிடும் அபாயத்தை தந்துள்ளது. அதிகாரம் மிக்கவராக இருந்த ஒருவர் இப்போது டம்மியாக்கப்பட்டுள்ளார்.
பீதியில் அதிமுகவினர்
இந்நிலையில்தான் அதிர்ஷ்டமில்லாத பதவியா அதிமுகவின் பொருளாளர் பதவி? என்கிற பேச்சு அக்கட்சியில் புதிதாக புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அம்மா அடுத்து யாரை பொருளாளராக அறிவிப்பாரோ என்ற பீதியில் உறைந்துகிடக்கின்றனர் அதிமுகவினர்.
செல்லூர் ராஜூ
ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பொருளாளர் பதவியை பறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் தர தலைமை யோசித்து வருகிறதாம். சென்டிமென்ட் காரணமாக, அந்தப் பதவியே வேண்டாம். ஆள விடுங்க... என்று கதறுகிறாராம் செல்லூர் ராஜூ.
நீடிக்கும் அமைச்சர் பதவி
அதிமுகவில் அடிக்கடி அமைச்சர்கள் நீக்கம், துறை மாற்றம் செய்யப்பட்டும், செல்லூர் ராஜூ கடந்த 5 ஆண்டுகளாக கூட்டுறவுத்துறை அமைச்சராக ஸ்டெடியாக இருந்து வருகிறார். இத்தனைக்கும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. என்றாலும் இவரது அமைச்சர் பதவி பறிக்கப்படவில்லை. எனவே பொருளாளர் பதவி செல்லூர் ராஜூவுக்கே வழங்கப்படும் என்கிறார்கள்.
யார் அந்த (துர)அதிர்ஷ்டசாலி?:
இதுவரை பொருளாளர் பதவி தென் மாவட்டங்களை சார்ந்தவர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துதான் அடுத்த அதிமுக பொருளாளர் செல்லூர் ராஜூதான் என கூற ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஆளையை அட்ரஸ் இல்லாமல் செய்யும் இந்த பதவி தனக்கு தேவையா என்றுதான் செல்லூர் ராஜூ புலம்பி வருகிறாராம். அதிமுகவின் பொருளாளர் பதவியை அலங்கரிக்கப் போகும் அடுத்த அதிர்ஷ்டசாலி யாரோ?