2 முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டும் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட மதுரை எம்.எஸ் பாண்டியன்
சென்னை: அதிமுகவில் தனது வேட்பாளர் வாய்ப்பு பறிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் புதிய வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ். எஸ் பாண்டியனின் கட்சி விசுவாசம் தொண்டர்களை நெகிழச் செய்தது.
மதுரை வடக்கு சட்டசபைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பாண்டியன் திடீரென மாற்றப்பட்டார். இவருக்குப் பதில் மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியானதும் மதுரை அதிமுகவினரிடம் பரபரப்பு காணப்பட்டது. ஏற்கெனவே மதுரையில் 2 இடங்களில் கட்சி முகவர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப் பட்டது.
வேட்பாளர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் தொடங்கிய இக்கூட்டங்களில் வேட்பாளர் வாய்ப்பை இழந்த எம்.எஸ்.பாண்டியன் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் முதல் நபராக கூட்டத்துக்கு வந்தார் பாண்டியன்.
புதிய வேட்பாளரான மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா சென்னையில் இருந்ததால் அவர் பங்கேற்க வில்லை. கூட்டத்தில் பேசிய எம்.எஸ்.பாண்டியன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதி முகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
தனது வேட்பாளர் வாய்ப்பு பறிபோனது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல், அதிமுக வெற்றி குறித்து மட்டுமே பாண்டியன் பேசியது அங்கிருந்த தொண்டர்களை நெகிழச் செய்தது.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போதும் மதுரை வடக்கு தொகுதியின் வேட்பாளராக பாண்டியனைத்தான் ஜெயலலிதா முதலில் அறிவித்தார். பின்னர் மாற்றப்பட்டு ஏ.கே.போஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார்.
இந்தமுறையும் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டார் பாண்டியன், அந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை, அவருக்குப் பதில் ராஜன் செல்லப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011, 2016 என இரண்டு முறையும் மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டுள்ளார் எஸ். எஸ். பாண்டியன்.
சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் ஒருநாள் மட்டுமே இடம்பெறும் அதிர்ஷ்டம் மட்டுமே எஸ்.எஸ். பாண்டியனுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.