வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு... முக்கியப் புள்ளிகளுக்கு விரைவில் காப்பு?
நெல்லை: நெல்லையில், வேளாண்மைத் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை வேளாண்மை பொறியியல் துறை உதவிசெயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தச்சநல்லூரில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலைக்கு காரணம் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பிலிருந்து வந்த கடும் நெருக்கடியும், மிரட்டலுமே காரணம் என்று பரபரப்பு கிளம்பியது.

முத்துக்குமாரசாமியின் துறையில் தற்காலிகமாக ஏழு டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்காக ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.4 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளது. இதற்காக நெல்லை மாவட்ட அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள் சிலர் ஒரு பரிந்துரைப் பட்டியலை தயாரித்தனர். 7 பணியிடங்கள் என்றாலும் மொத்தம் 32 நபர்களிடம் அதிமுக பிரமுகர்கள் பணம் வாங்கிக் குவித்துள்ளனர்.
ஆனால் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரு பட்டியலைத் தயாரித்து வைத்திருந்தார். அதற்கு முன்பாகவே நெல்லை அதிமுக பிரமுகர்கள் பணம் வாங்கிக் குவித்த செயல் அவருக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தாராம். மேலும், இதுகுறித்து முத்துக்குமாரசாமியிடம் அவர் கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இப்படி இரு தரப்பிடமும் சிக்கி கடும் நெருக்கடிக்குள்ளானதால் மன உளைச்சல் ஏற்பட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் முத்துக்குமாரசாமி என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சிப் பதவிகள், அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தார். மேலும் அக்ரியின் உதவியாளர் பூவய்யாவும் கைது செய்யப்பட்டார்.
தற்போது சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. அன்பு தலைமையிலான குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட பூவையாவை விசாரித்தபோது, ஏழு சீட்களில் யாருடைய பரிந்துரையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற பட்டியலை தந்துள்ளார். அதிகாரி முத்துக்குமாரசாமியின் மொபைல் போனில் பேசி தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பட்டியலும் ஒப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. ஆதாரங்களை சேகரிக்கும் போலீசார், கைதுக்கு முந்தைய பணிகளை தொடங்கியுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்த பின்னர் முதலில் இவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்களாம். அதன் பின்னர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications