சமூகவலைதளம், வாட்ஸ்ஆப்பில் அம்மா போஸ்டர் அனுப்பும் அதிமுக ஐ.டி. பிரிவு
சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளில் சுணக்கம், வெள்ள நிவாரணப் பொருட்களை பறித்தல் ஆகிய செயல்களால் அரசு மீதும் அதிமுகவினர் மீதும் மக்களிடையே கடும் வெறுப்பு பரவி வரும் நிலையில், அதை சமாளிக்கவும் அரசின் நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லவும் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அம்மா புகழ் பாடும் போஸ்டர்களை அதிமுக ஐ.டி. பிரிவு வெளியிட்டு வருகிறது.
ஆனால், இது மிகவும் தாமதமான நடவடிக்கையாகவே தெரிகிறது.
வரலாறு காணாத மழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து ஒரு வகையாக மீண்டு வருகின்றன. மக்கள் வெள்ளத்தில் சிக்கியபோது முதல்வர் ஜெயலலிதா தனி ஆளாக சென்னையை காப்பாற்றுவதாகக் கூறி அதிமுகவினர் பெரிய விளம்பர போஸ்டர்கள் வைத்து மக்களிடம் திட்டு வாங்கினர்.
இந்நிலையில் சாலையோரம் போஸ்டர்கள் வைத்தால் மக்கள் திட்டுவதுடன் அவற்றை கிழித்தெறிந்துவிடுவார்கள் என்று நினைத்த அதிமுகவினர் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளனர்.
ஆம், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அம்மா புகழ்பாடும் டிஜிட்டல் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் ஒரு பக்கம் தீயாக வேலை செய்து போஸ்டர்களை வெளியிட மறுபக்கம் மக்கள் அதே சமூகவலைதளங்கள், வாட்ஸ் ஆப்பில் அதிமுகவினரை கழுவிக் கழுவிக் ஊத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந் நிலையில் தங்கள் தரப்பின் நியாயங்களை எடுத்துச் சொல்லும் வகையில் ஐ.டி. பிரிவை களமிறக்கியுள்ளது அதிமுக.