'சின்னம்மா சீக்கிரமே முதல்வர் அம்மா!'- அதிமுக அமைச்சர்கள்
சென்னை: சின்னம்மா சசிகலா சீக்கிரமே முதல்வர் ஆவார் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவர்கள் நிருபர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதாவின் நிழலாக உடனிருந்த சசிகலா அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்றுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொண்டர்களை கட்டிக் காக்கும் உன்னதமான பொறுப்பை சசிகலா ஏற்றுள்ளார். அதிமுகவினர் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் வகையில் சிறந்த உரையை சசிகலா ஆற்றியுள்ளார். சசிகலா திறம்பட பணியாற்றுவார். அவரது தலைமையின் கீழ் அதிமுக மேலும் சிறப்பான வளர்ச்சியடையும். தமிழகத்துக்கும் சசிகலா பாதுகாப்பாக இருப்பார். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் கட்சியை நடத்திச் செல்வோம் என்ற உறுதிமொழியை அவர் எடுத்துள்ளார், அவருக்கு உண்மை தொண்டர்கள் துணையாக இருப்பார்கள்.
சசிகலா, விரைவில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதை ஏற்று விரைவில் அவர் முதல்வராக மக்கள் பணியாற்றுவார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவர்கள். அவர்களின் மகத்தான வழியில்தான் அதிமுக இன்றுவரை பயணித்திருக்கிறது.
இனியும் அதே வழியில்தான் வீறுநடைபோடும் என்று சசிகலா பேசியது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அவரது உரை மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் முதல்வராகவும் வரவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்," என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications